விரைவில் ஆவின் குடிநீர்.. பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம்.. அமைச்சர் நாசர் அறிவிப்பு!
சென்னை: ஆவின் நிர்வாகம் மூலம் விரைவில் குடிநீர் பாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
Recommended Video
2011ம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது அம்மா குடிநீர் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தண்ணீர் பாட்டிலில் குறைந்த விலைக்கு குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆவின் மூலம் மீண்டும் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறுகையில், ஆவின் மூலம் விரைவில் குடிநீர் அறிமுகம் செய்யப்படும். 1 லிட்டர், 500 மி.லி. அளவுகளில் தண்ணீர் பாட்டில் தயாரிக்கப்படும். இவை ஆவினுக்கு சொந்தமான 28 சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்கப்பட உள்ளது.
அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஆவின் பால் பாக்கெட்டுகளில் செய்யப்பட்டு வரும் விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனை பார்த்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலரும், பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஆவின் வருவாயை அதிகரிக்க பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்தின் வருவாய் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.