கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரி 18%-ஆக உயர்வு.. குறைக்க நடவடிக்கை.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதி
சென்னை: கிரைண்டர், மோட்டார் பம்பு செட்களின் ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.
Recommended Video
சண்டிகரில் நடைபெற்ற 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உயர்த்தப்பட்ட வரி விகிதங்களை குறைப்பது தொடர்பாக மதுரையில் நடைபெறவுள்ள அடுத்தக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
கிரைண்டர், மோட்டார் பம்பு செட்களை பொறுத்தவரை நடுத்தர வர்க்கத்தினரும், விவசாயிகளும் அதிகம் பயன்படுத்தக்கூடிய வாங்கக்கூடிய பொருட்களாக உள்ளன.
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வாட் வரி குறைப்பு...அதான் வரலாறு.. பழனிவேல் தியாகராஜன் சுளீர்
ஜிஎஸ்டி வரி உயர்வு
சண்டிகரில் நடைபெற்ற 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கிரைண்டர், மோட்டார் பம்பு செட், எல்.இ.டி.பல்புகள், கத்தி, பேனா, மை, உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது. அதன்படி கிரைண்டரின் ஜி.எஸ்.டி. வரியானது 5%-ல் இருந்து 18%-ஆக உயர்ந்தது. இதேபோல் மோட்டார் பம்பு செட்களின் ஜி.எஸ்.டி. வரியும் 18% ஆக உயர்த்தப்பட்டது. இதேபோல் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பேனா, மை, உள்ளிட்ட பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியும் 12%-ல் இருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டது.
அமைச்சர் உறுதி
இது நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் சண்டிகர் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கையும் உறுதியும் அளித்துள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி சேவை மையம்
மேலும், ஜி.எஸ்.டி. சேவை மையங்களில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் கிடைப்பதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். முன்னதாக பம்புசெட் ஜி.எஸ்.டி.வரி விகிதம் உயர்வால் தொழில் முடக்கம் ஏற்படக்கூடும் என கோவையை சேர்ந்த பம்புசெட் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து தங்கள் கவலையை தெரிவித்தனர்.
சமாதான் திட்டம்
இதனிடையே தமிழகத்தில் நிலுவையில் உள்ள வாட் வரித் தொகையை வசூலிக்க உதவிடும் வகையில் சமாதான் திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.