அடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி
அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்றதில் இருந்தே ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்... அவை ஒவ்வொன்றும் மக்களை உற்று நோக்க வைத்து வருகின்றன.
கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணைத்ததில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார்..
மீட்பு
அதன்படியே கோயிகளுக்கு சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன.. இதையடுத்து, சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது... இதேபோல் தமிழ்நாடு முழுக்க இருக்கும் கோவில்ஆக்கிரமிப்பு ஒவ்வொன்றாக நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
விரிவாக்கம்
இதற்குபிறகு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரிவாக்கப்படும் என்றும், பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சேகர்பாபு 2 நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.. இதைதவிர, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டப்படி அடுத்த நூறு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும், தமிழில் அர்ச்சனை செய்வதை அரசு உறுதி செய்யும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
பேட்டி
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் சேகர்பாபு சொன்னதாவது:
தமிழக அரசு
"அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை போல பெண்களும் விருப்பப்பட்டால், தமிழக அரசின் உதவி மூலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள். அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்படும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்... அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும். தமிழில் அர்ச்சனை செய்வதற்கு பயிற்சி தரப்படும்.
அறிவிப்பு பலகை
மேலும், முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர் , செல்போன் நம்பர்கள், அறிவிப்பு பலகையில் இடம் பெறும்... ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையே ஜீயர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவர்" என்றார். அமைச்சரின் இந்த அதிரடியான அறிவிப்பு மிக முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.
மிகப் பெரிய திட்டம்
பெண்களை பல்வேறு காரணங்களை சொல்லி கோவில் பக்கமே வர விடாமல் தடுக்கும் பிற்போக்குத் தனங்களுக்கு மத்தியில், கருவறை வரை பெண்களை கொண்டு செல்ல வைக்கும் மிகப் பெரிய முற்போக்குத் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு மக்களிடையே குறிப்பாக சமூக வலைதளங்களில் மிகப் பெரிய வரவேற்பும் காணப்படுகிறது. பலரும் திமுக அரசைப் பாராட்ட ஆரம்பித்துள்ளனர்.