உதயநிதி ஸ்டாலின் "பெரிய மூவ்.." தமிழ்நாட்டில் உலக கோப்பை கபடி போட்டி?
சென்னை: உலகக்கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் மற்றும் மகளிர் டென்னிஸ் தொடரை நடத்தியுள்ள நிலையில், அடுத்ததாக கபடி உலகக்கோப்பை நடத்த தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டுவது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி, முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், உட்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.
இதனிடையே கடந்த மாதம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தில் வினா - விடை நேரத்தில் திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பதில் அளித்துள்ளார்.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்..சட்டசபையில் அமைச்சர் உதயநிதி முதல் முறையாக சொன்ன பதில்
திருப்பூர் விளையாட்டு மைதானம்
அதில், திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ் திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா என்றும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எப்போது நடத்தி முடிக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், திருப்பூரில் 8 ஏக்கரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் பதில்
மேலும், டென்னிஸ், கைப்பந்து, 400 மீட்டர் ஓடுதளம், கூடைப்பந்து உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணி பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு 60% பணிகள் முடிவு பெற்றுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முழு பணிகள் முடிக்கப்பட்டு, அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1,500 பார்வையாளர்கள் அமரும் வகையில் புதிய பார்வையாளர் மாடம் அமைக்கும் பணி நிறைவடையும் என்று தெரிவித்தார்.
ஜூன் மாதத்தில் முடிவு
அதேபோல், செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகமே வியக்கும் வகையில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மகளிருக்கான டென்னிஸ் போட்டியும் தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தப்பட்டது. கபடி மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும்.
உலகக்கோப்பை கபடி
உலகக்கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியதன் மூலம் பள்ளி மாணவர்கள் பலரும் செஸ் போட்டியில் ஆர்வம செலுத்தி வரும் நிலையில், அடுத்ததாக தமிழ்நாடு அரசு கபடியை கையில் எடுத்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.