அண்ணா சிலைக்கு தீ வைப்பு: வன்முறையை தூண்டும் சக்திகளை மக்கள் தண்டிப்பார்கள்.. ஸ்டாலின் ஆவேசம்!
சென்னை: கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அண்ணா சிலைக்கு தீ வைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் அண்ணா சிலைக்கு அவமரியாதை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- 'தமிழ்நாடு' என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையைக் கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் கொடூர எண்ணம் கொண்டோர் தீ வைத்துக் கொளுத்தியுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது.
அமைதி தவழும் தமிழகத்தை வன்முறைக்காடாக்க நினைக்கும் சக்திகளைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு ஜனநாயக ஆயுதத்தால் நிச்சயம் தண்டிப்பார்கள். அண்ணாவின் பெயரை லேபிளாகக் கொண்ட அடிமைக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் சிலைகள் மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் நிறுவனரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன.
இத்தகைய வன்முறைப் போக்கை ஒடுக்க வக்கின்றி, எதிர்க்கட்சிகளை வக்கணை பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் போக்கு வெட்கக்கேடானது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.