ஜெ. ஸ்டைலில் ஸ்டாலின்.. காங்கிரஸுக்கு "சிங்கிள்" தான்?.. பரபரக்கும் தேர்தல் களம்!
ஜெயலலிதா ஸ்டைலை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி எப்போது வரும் என்று தெரியவில்லை.. ஆனால் தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி மட்டுமே தெளிவாக உள்ளது. அதிமுக, பாஜக மற்றும் பிற கட்சிகளின் கூட்டணியில் தெளிவு நிலை ஏற்படவில்லை.
நிலைமை இப்படி இருக்க திமுக தரப்பு படு வேகமாக தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தான் போட்டியிடப் போகும் தொகுதிகள், கூட்டணியில் யார் யார், அவர்களுக்கான தொகுதிகள் வரைக்கும் திமுக யோசித்து முடிவெடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
ஜெ. பாணியில் ஸ்டாலின்
திமுக படு தெளிவாக இருக்கிறது இந்த முறை. கிட்டத்தட்ட ஜெயலலிதா கடந்த முறை எப்படி செயல்பட்டாரோ அதே ஸ்டைலைத்தான் இந்த முறை திமுக கைப்பிடித்துள்ளது. அதாவது தனக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்ற பாணியை திமுக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
போட்டியிட முடிவு
தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் இன்று. ஆக மொத்தம் 40. இதில் சரி பாதிக்கும் மேலான தொகுதிகளில் அதாவது கிட்டத்தட்ட முக்கால்வாசி தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாக செய்திகள் கசிகின்றன.
விடுதலை சிறுத்தைகள்?
திமுகவைப் பொறுத்தவரை இந்த முறை கூட்டணியையும் கூட அடைசலாக இல்லாமல் சிம்பிளாக வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முக்கிய கூட்டாளியாக இருக்கலாம். அது தவிர ஓரிரு கட்சிகளுக்கு மட்டும் கூட்டணியில் இடம் தரப்படுமாம். கடந்த 2014 தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகியவை இடம் பெற்றது. இந்த முறை விடுதலைச் சிறுத்தைகளுக்கே தடுமாற்றமாக உள்ளது.
உதயசூரியன்
அதை விட முக்கியமான விஷயம்.. தனது கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதில் திமுக தீர்மானமாக உள்ளதாம். காங்கிரஸ் மட்டும் விதி விலக்கு. எனவே யாராக இருந்தாலும் சூரியன் சின்னம்தான். அதற்கு ஒத்துக் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே சீட் தரப்படும் என்று சொல்கிறார்கள்.
ஜெ. ஸ்டைல்
இது ஜெயலலிதா ஸ்டைலாகும். ஜெயலலிதா இப்படித்தான் செய்வார். தனது கூட்டணியில் சேரும் எந்தக் கட்சியாக இருந்தாலும் இரட்டை இலையில்தான் போட்டியிட வேண்டும் என்பது அவர் வைக்கும் நிபந்தனை. இப்படித்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் இலையில் போட்டியிட்டு உள்ளே புகுந்தனர். இதற்கு ஒத்துக் கொள்ளாமல் போனதால்தான் ஜி.கே.வாசன் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்காமல் போனது என்பது நினைவிருக்கலாம்.
ஒற்றை இலக்கம்தான்
இதே பாணியை தற்போது மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியையும் சேர்த்து மொத்தமே ஒற்றை இலக்கத்தில்தான் சீட் கொடுக்க திமுக தீர்மானித்துள்ளதாம். டபுள் டிஜிட்டுக்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது இப்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. ஒரு வேளை காங்கிரஸ் முரண்டு பிடித்தால் 10 வரைதான் அதிகபட்சம் போகும் என்கிறார்கள்.
ஊராட்சி சபை கூட்டம்
ஒருபக்கம் கூட்டணியை இப்படி செட் செய்து விட்ட மு.க.ஸ்டாலின் மறுபக்கம் தனது கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பது வரை ஆலோசனைகளை நடத்தி முடித்து விட்டதாக சொல்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முறைப்படி எல்லாவற்றையும் செய்யவுள்ளனர். அதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் தனது கட்சிக்கான வெற்றி வாய்ப்பையும் நாடி பிடித்துப் பார்க்க உள்ளாராம்.