2024 தேர்தல்.. காங்கிரஸ் எடுக்கும் “பேராயுதம்!” - தொடங்கி வைக்கும் ஸ்டாலின்.. ராகுலின் ஒற்றுமை பயணம்
சென்னை: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஒற்றுமை பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு பக்கம் பாஜக ஆயத்தமாகி இருக்கும் காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் உட்கட்சி பூசல்களை களைத்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது. குலாம் நபி ஆசாத், கபில் சிபல் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் காங்கிரஸ் கட்சி ஆட்டம்கண்டு போயிருக்கிறது.
ஆனால், சமீபத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய தொடர் போராட்டம் அக்கட்சியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை அக்கட்சி நடத்த முடிவு செய்தது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா! தமிழக காங். சிறுபான்மையினர் அணிக்கு இலக்கு நிர்ணயித்த மேலிடம்!
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஒற்றுமை பயணம்
நிலைமை இவ்வாறு இருக்க நாடு முழுவதும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெறுக்கவும், ஆளும் பாரதிய ஜனதா அரசின் மீதான குறைகளை கொண்டு சேர்க்கவும் ராகுல் காந்தி தயாராகி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி
ஜோதிமணி
செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாத யாத்திரையை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து ஜோதிமணி தெரிவிக்கையில், "வெறுப்பால் பிரிந்துகிடக்கும் இதயங்களை ஒருங்கிணைத்து, அன்பை விதைக்கவும், அழிந்துபோன பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும் காங்கிரஸ் கட்சி இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்துகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடங்கி வைக்கும் ஸ்டாலின்
இந்த நிலையில் இந்த பாத யாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கி வைக்க இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து இருக்கிறார். காங்கிரஸின் ஒற்றுமை பயணத்தில் கூட்டணி கட்சியினரும் கலந்துகொள்ள இருப்பதாக அவர் அறிவித்து உள்ளார்.