அப்ப தினகரன், கமல், சீமான் எல்லாமே வேட்டையாடுவது அதிமுக ஓட்டுகளை? புதிய தலைமுறை சர்வே சொல்வது என்ன?
சென்னை: புதிய தலைமுறை வெளியிட்டுள்ள இன்றைய கருத்து கணிப்புகள் சிறிய கட்சிகளான தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை அனைத்துமே அதிமுகவின் வாக்குகளைத்தான் பிரிக்கப் போகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
புதிய தலைமுறை வெளியிட்ட சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு களநிலவரத்தில் இருந்து நமக்கு கிடைத்து கொண்டிருக்கும் பல தகவல்களுடன் பெருமளவில் ஒத்துப் போகவே செய்கின்றன. இன்னமும் சொல்லப் போனால் திமுக- அதிமுக அணிக்கு இடையேயான 10% இடைவெளி என்பது திமுக அணிக்கு புதிய தலைமுறை கணித்திருக்கும் 151-158 என்பதற்கும் மிக கூடுதலான இடங்கள் கிடைக்கவே வாய்ப்புள்ளதை கூறுகிறது.
வடதமிழகம்- பாமக
சென்னை மற்றும் வட மண்டலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை முழுமையாக நம்பியிருக்கிறது அதிமுக. ஆனால் பாமகவின் 20% உள்ஒதுக்கீட்டுப் போராட்டத்துக்கான வடதமிழகத்தின் ஆதரவு என்பது அப்படி எதிர்பார்த்த ஒன்றாகவே இல்லை. அப்போதே பாமகவின் செல்வாக்கு குறித்து கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் எழுப்பினர். பாமக நடத்திய அந்த போராட்டங்கள் வெறும் அரசியல் பேரங்களுக்கு என்பது புரிந்து போன ஒன்றாகிவிட்டது.
திமுக வாக்கு சதவீதம்
இதனையே இன்றைய புதிய தலைமுறை கருத்து கணிப்பு வெளிப்படுத்தி இருக்கிறது. சென்னை மற்றும் வடமண்டலத்தில் திமுக அணிக்கு இன்னமும் கூடுதல் இடங்கள் கிடைத்தாலும் கூட ஆச்சரியமில்லை என்பது ஒரு கருத்து. இன்னொன்று தென் தமிழகத்திலும் சரி மத்திய தமிழகத்திலும் சரி திமுகவின் ஆதரவு கை ஓங்கி இருக்கிறது. இதேபோல் பரவலாக திமுக அணிக்கான வாக்கு சதவீதம் என்பது அந்த அணி ஏற்கனவே பெற்றிருக்கிற வாக்கு சதவீதத்தை சிந்தாமல் சிதையாமல் காப்பாற்றி இருக்கிறது என்பதையும் காட்டுகிறது.
அதிமுக வாக்கு வங்கி சிதைவு
இன்னொரு பக்கம் அதிமுகவின் வாக்கு வங்கி சின்னாபின்னமாக சிதைந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் இந்த சர்வே சொல்கிறது. அதாவது இதனை இப்படி புரிந்து கொள்ள வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணிக்கு கடந்த காலங்களை விட கூடுதலாகவே வாக்குகள் கிடைக்கும். இந்த வாக்குகள் கணிசமான அளவு அதிமுக ஆதரவு பக்கத்தில் இருந்து வரக் கூடும்.
சிறு கட்சிகள் கபளீகரம்
அதேநேரத்தில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் என்னதான் திமுகவை விமர்சித்து பேசினாலும் அந்த அணியின் வாக்கு வங்கியில் ஓட்டையை போட முடியாமல் போய் அதிமுக வசம் இருந்த வாக்குகளை ஆளுக்கு ஒரு திசையில் பாய்ந்து பிராண்டிவிடுகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது புதிய தலைமுறையின் இன்றைய கருத்துக் கணிப்பு.