அந்த விஷயத்துக்கு வாய் திறக்காத கமல்.. மீண்டும் கையில் எடுக்கும் அதே அஸ்திரம்.. விறுவிறுப்பு களம்
கமல்ஹாசன் போட்ட ட்வீட் வைரலாகிறது
சென்னை: "2020 ஜனவரி மாதத்திற்கு மேல் கிராமசபை நடக்கவே இல்லை என்பதுதான் எங்களது குறை.. அதனால்தான் அதனை மனுவாக அளித்துள்ளேன்.. பட்ஜெட்டில் கிராமசபைக்கு என தனி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும்... அடுத்த கிராமசபை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கமல் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அரசியலுக்கு வந்ததுமே கிராமசபை என்ற விஷயத்தை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கையில் எடுத்தார்.. கமல் கிராமசபை பற்றி சொன்னபோது யாருமே அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. ஆனால், மாதிரி கிராம சபை கூட்டங்களுக்கும் கமலே நேரடியாக சென்று விழிப்புணர்வு ஊட்டினார்.
இதற்கு பிறகுதான், திமுகவும் இதே பாணியை தொடர்ந்தது.. முக ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்கு முன்பு கிராம சபை கூட்டங்களை நடத்தினார்.. அதுபோலவே, சட்டசபை தேர்தலுக்கு முன்பும் கூட்டங்களை நடத்தினார்..

அதிமுக
செல்லுமிடமில்லாம் கூட்டம் முண்டியடித்து கொண்டு வந்தது.. ஆனால், அடுத்தடுத்த நாட்களிலேயே இத்தகைய கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கு அதிமுக அரசு தடை போட்டுவிட்டது.. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள சூழலில், கடந்த மாதம் கமல் மீண்டும் கிராம சபை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.

கலெக்டர்
கோவை கலெக்டர் ஆபீசுக்கு நேரடியாக வந்து, கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் மனுவும் தந்திருந்தார்.. செய்தியாளர்களிடம் இதை பற்றி பேசும்போதுகூட, "2020 ஜனவரி மாதத்திற்கு மேல் கிராமசபை நடக்கவே இல்லை என்பதுதான் எங்களது குறை.. அதனால்தான் அதனை மனுவாக அளித்துள்ளேன்.. பட்ஜெட்டில் கிராமசபைக்கு என தனி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும்... அடுத்த கிராமசபை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

கமல் ட்வீட்
இப்படிப்பட்ட சூழலில்தான் கமல் ஒரு ட்வீட் இன்று பதிவிட்டுள்ளார்.. அதில், "கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது' என்று கூறியுள்ளார்.

முக்கியத்துவம்
மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறது.. 25-ம்தேதி கமல் பிரச்சாரத்தையும் தொடங்க உள்ளதாக தெரிகிறது.. ஆனால், என்னதான் கமல் கிராம சபை கூட்டத்தை நடத்தி வந்தாலும், தேர்தல் என்று வரும்போது, கிராமங்களுக்கு முக்கியத்துவம் தந்து பிரச்சாரங்களையும், வேட்பாளர்களையும் நிறுத்துவதில்லை என்று ஒரு குறை இருக்கவே செய்கிறது.

குறைகள்
குறிப்பாக, கமல் மேல்மட்ட அளவிலேயே அரசியல் செய்து வருவதாகவும், கமல் நினைத்திருந்தால், ஏதாவது ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து தானே நேரடியாக போட்டியிட்டிருந்தால், அது இன்னமும் அவருக்கு பலத்தை தந்திருக்கும் என்றும் பரவலாக ஒரு பேச்சும் உள்ளது.. இனி அடுத்தடுத்த தேர்தல்களை தமிழகம் சந்திக்க தயாராகி வரும் நிலையில், கமல் எப்படியும் தன் கட்சி மீதான குறைகளையும் அதிருப்திகளையும் போக்குவார் என்றும் நம்பப்பட்டும் வருகிறது.

வேளாண் சட்டம்
அதேசமயம், கிராமசபைகள் கூட்டத்திற்கு அதிக ஆர்வம் காட்டி வரும் கமல், வேளாண் சட்டம் பற்றியோ, போராடும் விவசாயிகள் பற்றியோ ஒருவருடமாகவே வாய் திறக்கவில்லை என்று அவர்மீது விமர்சனமும் எழுகிறது.. கடந்த மே மாதம்தான் விவசாயிகள் போராட்டம் குறித்து தன்னுடைய ஆதரவு தெரிவித்தார் என்றும், இதுகூட வரப்போகும் தேர்தலை முன்னிறுத்தியோ என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பிவிட்டு வருகின்றனர்.. ஆனாலும், கமல் இன்று போட்ட ட்வீட், கிராம சபை மீதான அவரது நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துவது போலவே காட்டுகிறது.












Click it and Unblock the Notifications