தேர்தல் முறையில் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.. மீண்டும் கொளுத்திப்போட்ட கமல்.. திமுக ஆதரவு?!
சென்னை : குடியரசுத் தலைவரைப் போல தேர்தல் முறையில் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
தமிழக ஆளுநர், சட்டமன்றம் நிறைவேற்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றது முதலே திமுக அரசு உடன் மோதல் போக்கைக் கையாண்டு வருவதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு மதிப்பளித்து, மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதலளிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஜார்க்கண்ட் ஆளுநர் திடீர் டெல்லி பயணம்- ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவிக்கு ஆப்பு?
ஆளுநர் - திமுக அரசு மோதல் போக்கு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக ஆதரவு கருத்துகளையே பேசி வருவதும், தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வருவதும் தொடர்ந்து வருவதால் திமுகவினர் ஆளுநரை கடுமையாக விமர்சித்து வந்தனர். திமுக எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்திலேயே, ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பேசினார்.
அரசியல் கருத்துகள்
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும், திராவிடத்திற்கு எதிராகவும், சனாதனத்திற்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பேசுவதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. திமுக அரசு எதிர்க்கும் நீட், புதிய கல்விக்கொள்கை ஆகிய விஷயங்களில் ஆளுநரின் நிலைப்பாடு நேர் எதிரானதாக உள்ளது. திமுக அமைச்சர்கள் - ஆர்.என்.ரவி இடையேயான கருத்து மோதல்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
அரசோடு முட்டல்
அரசியல் சாசனத்துக்கு எதிராக, ஆளுநர் அரசியல் ரீதியிலான கருத்துகளைத் தெரிவிப்பது அவ்வப்போது சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. ஆளுநருக்கு செக் வைக்கும் நோக்கத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் என்ற சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது திமுக அரசு. அதனை ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலந்தாழ்த்தி வருகிறார்.
கமல் வேண்டுகோள்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார். அதில், "பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்தி 30-12-21 அன்று சட்டவிளக்கங்களோடு மக்கள் நீதி மய்யம் விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பளிக்க வேண்டும்
இதுதொடர்பாக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதலளிக்க மறுத்து தமிழக அரசிடம் விளக்கம் கோரியுள்ளார் தமிழக ஆளுநர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு மதிப்பளித்து விரைவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இத்திருத்தத்திற்கு ஒப்புதலளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
ஆளுநர் தேர்தல்
நியமனமுறை ஆளுநர் தேவையில்லை என்றும், குடியரசுத் தலைவரைப்போல தேர்தல் முறையில் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமென்ற கருத்தாக்கத்தை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் முன்வைத்திருந்ததை நினைவுகூர்கிறோம்." என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.