தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளுக்கு புத்துயிர்... வேளாண்மைத் துறை அமைச்சர் உறுதி..!
சென்னை: தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது, வேளாண்மைத்துறையில் இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் திட்டங்களின் விவரத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் கிஸான் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். இதுவரை 114 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் திமுக ஆட்சியில் தவறு என்ற பேச்சுக்கே இடமிருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் கிஸான் திட்டத்தில் முறைகேடு நிகழ்த்தியவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் இப்போது கிஸான் திட்டத்தை செயல்படுத்த சில மாற்று வழிகளை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் படி மீண்டும் உழவர் சந்தை திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டப்படும் என்றும் இன்னும் புதிதாக பல இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுத்தப்படும் எனவும் கூறியிருக்கிறார்.
மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தாது என்றும் நீரா பானம் தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி அதற்கு பிறகு முடிவு எடுக்கபடும் எனவும் கூறினார்.
மேலும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications