ஊ சொல்றியா.. ஊ ஊ சொல்றியா? ஆலுமா டோலுமா?.. இதெல்லாம் பாட்டா? சட்டசபையில் சீறிய நயினார் நாகேந்திரன்
சென்னை: ஊ சொல்றியா.. ஊ ஊ சொல்றியா, ஆலுமா டோலுமா உள்ளிட்டவை எல்லாம் பாடல்களா என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புஷ்பா படத்தில் வரும் ஊ சொல்றியா மாமா பாடல் மிகவும் பிரபலம். எந்த ரீல்ஸ், ஷார்ட்ஸ் என்றாலும் இந்த பாடல் தவறுவதில்லை. அது போல் ஒரு கட்டத்தில் ஆலுமா டோலுமா பாடல் சூப்பர் ஹிட்டடித்தது.
தற்போது பீஸ்ட் படத்தில் வரும் அரபிக் குத்து! இந்த பாடல்கள் தூய தமிழில் இல்லாவிட்டாலும் அதற்கு அர்த்தமே தெரியாவிட்டாலும் அந்த பாடல்கள் நடிகர், நடிகையர்களின் ரசிகர்களை தாண்டி பெரும் வெற்றி பெற்று வருகிறது.
ஊ சொல்றியா.. ஊ ஊ சொல்றியா.. ஆலுமா டோலுமா.. இதெல்லாம் பாட்டா.. சீறிய நயினார் நாகேந்திரன்
சட்டசபை
இந்த நிலையில் இன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில் புஷ்பா தி பயர் எனும் திரைப்படத்தில் வரும் ஊ சொல்றியா மாமா ஊஊ சொல்றியா மாமா இதெல்லாம் பாடலா?
ஆலுமா டோலுமா
அது போல் நடிகர் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வந்த ஆலுமா டோலுமா உள்ளிட்டவை எல்லாம் பாடலா? இத்தகைய பாடல்களுக்கு இந்தி படித்துவிட்டா அர்த்தம் தேட முடியும்? 50 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சந்ததியினர் இதுதான் நம் கலாச்சாரமாக இருந்ததாக தவறாக எண்ண மாட்டார்களா என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் இணைப்பு மொழி
இந்தியாவின் இணைப்பு மொழி இந்தி என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளது. அது போல் ஆங்கிலத்திற்கு மாற்று இந்திதான் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது. தமிழகத்தில் ஒரு போதும் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம் என தமிழக அரசு பதிலடி கொடுத்தது.
தமிழக பாஜக
அது போல் தமிழக பாஜகவும் ஒரு மொழியை கற்பதில் தவறில்லை. ஆனால் அதை திணித்தால் தமிழக பாஜக எதிர்க்கும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தி மொழியை போன்று வரும் பாடலுக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.