பிசாசு மாதிரி பாஜக வளர்கிறது என்ற அமைச்சர் துரைமுருகன்.. நாராயண் பதிலடி என்ன தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் பாஜக பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது என்று திமுக அமைச்சர் துரைமுருகன் பேசிய நிலையில், ராட்சசர்களை அழிக்க வந்த கட்சி தான் பாஜக என்று அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயண் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக எவ்வளவு முயற்சித்தாலும் காலூன்ற முடியாது என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ஒருபக்கம் தமிழகத்தில் நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம் என்று பாஜகவினர் கூறிவருகின்றனர்.

பாஜக ராட்சசன் போல வளர்ந்து வருகிறது
ஆளும் திமுகவிற்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் பாஜக போராட்டங்களை நடத்தி வேகமாக பணியாற்றி வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு போன்றவையும் பாஜகவுக்கு கூடுதல் ஸ்பேஸ் கிடைப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் திமுக கூட்டத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தமிழகத்தில் பாஜக ராட்சசன் போல வளர்ந்து வருகிறது என்று கூறியிருந்தார்.

பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்க வேண்டும்
இது தொடர்பாக துரைமுருகன் கூறுகையில், இதுவரை நமது எதிரி அதிமுகவை எதிர்த்தோம். இந்த முறை நாம் ராட்சசனை பார்க்கப் போகிறோம். பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பாஜக. இந்த முறை நாம் பெரிய பண திமிங்கலத்தை எதிர்க்கப் போகிறோம். பணம் மற்றும் அதிகார பலத்தோடு போராடுவார்கள். அதனை நாம் முறியடிக்க வேண்டுமென்றால், நாம் பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்க வேண்டும்.

துரைமுருகனே இப்படி பேசியது
தேர்தல் எப்போது வந்தாலும், எப்படி வந்தாலும் அதனை நாம் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஆளும் கட்சியின் பொதுச்செயலாளருமாக இருக்கக் கூடிய துரைமுருகனே இப்படி பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது.

இயல்பிலேயே நகைச்சுவையாக
பாஜக ஒருபோதும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்று பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கூறி வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகனே பாஜக தமிழகத்தில் ராட்சன் போல வளர்ந்து வருவதாக கூறியிருப்பது பாஜகவின் வளர்ச்சியை ஒப்புகொண்டிருப்பது போல பேசியது மிகுந்த கவனம் பெற்றது. எனினும், இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக்கூடிய அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக இவ்வாறு பேசியிருப்பார்.

ராட்சசன் போல வளர்ந்து வரவில்லை
தமிழகத்தில் பாஜகவை கண்டு யாரும் அச்சப்படவில்லை" என்றார். இந்த நிலையில், ராட்சசர்களை அழிக்க வந்த கட்சி பாஜக என்று அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயண் திருப்பதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாராயண் திருப்பதி இது தொடர்பாக கூறுகையில், "ராட்சசன் போல பாஜக வளர்ந்து வருவதாக துரைமுருகன் சொல்கிறார். ராட்சசன் போல வளர்ந்து வரவில்லை.

மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்
ராட்சசன்களை அழிக்க பாஜகவின் வளர்ச்சி வந்து இருக்கிறது. இந்த ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்களை நாங்கள் வெளிக்கொண்டு வந்து இருக்கிறோம். இந்த ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications