நீட் தேர்வுக்கு எதிராக முதல் கையெழுத்து போடுவேன் என்று சொல்லிவிட்டு குழப்புவதா? - இபிஎஸ் காட்டம்
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி பொய்யான வாக்குறுதி அளித்து விட்டு இப்போது மக்களை குழப்பி வருகின்றனர் என்று திமுக அரசை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி நீட் தேர்வை ரத்து செய்யாததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். சட்டசபைத் தேர்தலின் போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது மக்களை குழப்பி வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
நீட் தேர்வை வைத்து தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடைபெற்று வருகிறது. அனிதாவின் மரணம் நீட் தேர்வுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை திமுக முன்னெடுத்தது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவிற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியது திமுக.
நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்று கூறியது திமுக. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன் அனைவரும் எதிர்பார்த்தது நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தைத்தான். ஆனால் அந்த தீர்மானம் இன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள்
நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தனுஷ் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதை அடுத்து திமுக அரசுக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப்பேசினார் முதல்வர் மு.க ஸ்டாலின். சட்டசபைக்கு வரும் போதே அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு பேட்ச் அணிந்து வந்தனர்.

கார சார விவாதம்
சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , "வாணியம்பாடியில் மஜக நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு அடக்கும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், ஜெயலலிதா இருக்கும் போது கூட நீட்தேர்வு வரவில்லை. நீட் தேர்வு தொடர்பாக இன்று பேரவையில் மசோதா கொண்டு வருகிறோம்; சட்டத்தை எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

எடப்பாடி பழனிச்சாமி விவாதம்
இருப்பினும் நீட் தேர்வு பயத்தால் நேற்று மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டதை குறிப்பிட்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது என்று எடப்பாடி பழனிச்சாமி விவாதம் செய்தார். அத்துடன் கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையில் புகாரளித்த வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக வெளிநடப்பு
இதை தொடர்ந்து நீட் விலக்கு மசோதா தாக்கல் என அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, வாணியம்பாடியில் வாசிம் அக்ரம் என்ற இஸ்லாமிய சகோதரர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குழப்பும் திமுக அரசு
திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக முதல் கையெழுத்து போடப்படும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறினார். ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்கள் ஆகியும் தெளிவான ஒரு முடிவை அறிவிக்கவில்லை. திமுகவின் செயலால் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

மாணவர்கள் தயாராகவில்லை
ஜூன் மாதம் 23ஆம் தேதி ஆளுநர் உரை விவாதத்தின் போதே நேரடியாக கேள்வி எழுப்பினோம். நீட் நடக்குமா நடக்காதா என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு மு.க ஸ்டாலின் மழுப்பலான பதிலை கூறினார். திமுக அரசு எப்படியும் நீட் தேர்வை ரத்து செய்து விடும் என்ற மனநிலையில் தயாராகாமல் விட்டு விட்டனர். தற்போது நீட் தேர்வை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் மரணத்திற்குக் காரணம் திமுக அரசுதான். மாணவர்கள் தங்களை முழுமையாக தயார் செய்யாமலேயே இருந்தனர். அதற்கு பதில் அளிக்க கோரிக்கை வைத்தோம். திமுகவினர் சரியான பதிலை அளிக்காத காரணத்தால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்று கூறினார்.

நீட் விலக்கு கோரி தீர்மானம்
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் கொண்டு வந்தது.
அப்போது அதை திமுக எதிர்த்தது. இப்போது அதே திமுக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போது திமுக அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை.

அன்று எதிர்த்த திமுக
நாங்கள் தீர்மானம் கொண்டு வந்த போது நீட் தேர்வை ரத்து செய்வது என்பது சாத்தியமே இல்லை என்று அன்று திமுக எம்பி அ.ராசா சொன்னார். அயோக்கியத்தனம் என்றும் ராசா கூறினார். இன்று அதே தீர்மானத்தை திமுக கொண்டு வந்துள்ளது. இது அவர்களுக்கும் பொருந்துமா என்றும் கேட்டார் எடப்பாடி பழனிச்சாமி. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செயல்படுத்த முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு. அப்போது அங்கம் வகித்தது திமுகதான். அதிமுக தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகிறது என்று கூறினார். நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் திமுக கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்போம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications