அரசியலமைப்பு விதிப்படி ஆளுநர் தன் கடமையை செய்யவில்லை.. அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் ஆவசேம்
அரசியலமைப்பு விதிப்படி ஆளுநர் தன் கடமையை செய்யவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் தன் கடமையை செய்யாததால் அவரிடம் வலியுறுத்தினோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் விலக்கு மசோதவை கிடப்பில் போட்ட ஆளுநர் அதை மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். அரசியலமைப்பு விதிப்படி ஆளுநர் தன் கடமையை செய்யவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நீட் தேர்வுக்கு விலக்குகோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத்தலைவருக்கு அதனை அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டார் ஆளுநர்.
நீட் தேர்வு விலக்கு மசோதா: ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக
ஆளுநர் ஆர்.என். ரவி
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரு தினங்களுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
அனைத்துக்கட்சி கூட்டம்
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின், பாஜக, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமலேயே நீட் விலக்கு மசோதவை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டதாக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
அரசியலமைப்பு விதிப்படி ஆளுநர் தன் கடமையை செய்யவில்லை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர ஆளுநரிடம் நேரில் சென்று வலியுறுத்தினோம், குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் மசோதவை மறுபரிசீலனை செய்யுமாறு திரும்பி அனுப்பியுள்ளார். அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்க இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் ஆலோசனை வழங்க வேண்டும். தொடர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை .
குடியரசுத்தலைவர் ஒப்புதல்
2006 ஆம் ஆண்டு நுழைவு தேர்வு ரத்து தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒவ்வொரு மாநிலமும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆலோசனைக்கூட்டத்தில் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
தீர்மானம்
ஆளுநர் தெரிவித்துள்ள விளக்கத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நீட் தேர்வை பற்றிய உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, நீட் மசோதா குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தின் முடிவில், நீட் மசோதாவை எவ்வித மாற்றமும் செய்யாமல் ஆளுநருக்கு மீண்டும் அனுப்ப முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.