நெல்லைக்கண்ணன் பேச்சு குற்றால அருவிபோல கொட்டும்..முத்தரசன், தங்கம் தென்னரசு, கி.விரமணி உருக்கம்
சென்னை: நெல்லைக்கண்ணன் மறைவு தமிழுக்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பு என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். குற்றால அருவி போல பேசுவார் நெல்லைக்கண்ணன் அதைக்கேட்க கேட்ட ஆர்வம் அதிகரிக்கும் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளராக ஆர்.முத்தரசன்.
Recommended Video
தமிழ்கடல் நெல்லைக்கண்ணன் இன்று உடல் நலக்குறைவினால் காலமானார். அவருக்கு வயது 77. தமிழ் மீது தீராத பற்று கொண்டவர்.தமிழ் அவர் பேச்சில் மடைதிறந்த வெள்ளமென பாயும். அவர் வீட்டுக்குள் சென்றால் எங்கு பார்த்தாலும் புத்தகம் தான் நிறைந்திருக்கும்.
நெல்லை கண்ணன் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வப்போது மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டார். வயது முதிர்வு காரணமாக நடப்பதற்கு சிரமம் கொண்டார். அப்படி இருந்தும் பேச்சில் கொஞ்சம் கூட குறைபாடு இல்லாமல் இருந்தது. நெல்லைக்கண்ணன் உடல்நலக்குறைவால் இன்று திருநெல்வேலியில் அவரது இல்லத்தில் காலமானார். 1970 முதல் மேடையில் ஒலித்த அவரது குரல் இன்று ஓய்வெடுத்துள்ளது. நெல்லைக்கண்ணன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக அமைச்சர் தங்கம் தனது இரங்கல் செய்தியில், சிறந்த பேச்சாளர் ஏராளமான புத்தகங்களை வாசித்தவர். அவருடைய பேச்சாற்றல், எழுத்தாற்றல் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று கூறியுள்ளார். என்மீது மிகுந்த தனிப்பட்ட அன்பை காட்டக்கூடியவர். தமிழக அரசின் சார்பில் இளங்கோவடிகள் விருது அளிக்கப்பட்டது. நெல்லையில் இருந்து இருட்டுக்கடை அல்வா வாங்கிக் கொண்டு வந்து அன்போது கையில் கொடுத்தார். முதல்வரின் கையை பிடித்துக்கொண்டு கண் கலங்க உருகி நின்றது இன்றைக்கும் நினைவில் நிற்கிறது. தமிழ் கடல் என்று பாராட்டப்பெற்றவர். தமிழ் இலக்கிய உலகத்திற்கு அளப்பறிய கொடைகளைத் தந்தவர். பல அரசியல் தலைவர்களுடன் தொடர்பு கொண்டவர். அவர் இன்றைக்கு நம்மிடையே இல்லை. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கும் பேரிழப்பு என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தனது இரங்கல் செய்தியில், தமிழ் இலக்கிய பேச்சை தொழிலாக செய்யாமல் சேவையாக செய்தவர் நெல்லைக்கண்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். பணத்தின் பின்னால் செல்லாதவர். அவருக்கு என்று சேமிப்பு என்று எதுவும் இருந்ததாக தெரியவில்லை. தான் கற்றதை எல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று கருதியவர். குற்றால அருவிகள் போல அவரது பேச்சில் தமிழ் கொட்டும். மக்கள் அவருடைய பேச்சினை ஆர்வத்துடன் கேட்பாளர்கள். அவர் பேசுவதை அமைதியோடு கேட்பாளர்கள் நகைச்சுவைக்கு கைத்தட்டல் ஆர்ப்பரிக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர் முத்தரசன் புகழாரம் சூட்டினார்.
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தனது இரங்கல் செய்தியில், சிறந்த தமிழறிஞர் நெல்லைக்கண்ணன் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு. ஆற்றல் வாய்ந்த பேச்சாளர். மனதில் பட்டதை பேசக்கூடிய அறிவு நாணயம் மிக்கவர். தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப்பற்றி பேசியது மிகச்சிறந்த பேச்சு. தந்தை பெரியார் அவர்களை இதுவரை அப்படி ஒரு கோணத்தில் யாரும் பேசியிருக்க மாட்டார்கள். அவரை நான் நேரில் அழைத்து பாராட்டினேன். அதைக்கேட்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். எந்த வித பின்விளைவுகளைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக பேசக்கூடியவர். தமிழ் இனம் பெருமைமிக்க ஒருவரை இழந்து விட்டது என்று கி.வீரமணி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.