"பாவம்டா.. பாடி குடுத்துடறேன்".. உருகி மருகி உதவி.. டாப் நியூஸ் மேக்கர் எஸ்பிபி.. ஐஸ்கிரீம் குரலோன்!
எல்லா காலமும் நியூஸ் மேக்கராகவே உயர்ந்து காணப்படுகிறார் எஸ்பிபி
சென்னை: எஸ்பிபி இழப்பை இன்னும் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.. நம் வீட்டில் ஒருவரை இழந்துவிட்ட வெறுமையை உணர்ந்தபடியே வெறித்து கொண்டிருக்கிறோம்.. இந்த வருடம் மட்டுமல்ல, எந்த வருடங்கள் வந்து போனாலும் சரி, எஸ்பிபியின் குரல் நம்மை கட்டிப்போட்டபடியேதான் இருக்கும்!
"எஸ்பி பாலு" என்று வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இவரை அழைப்பார்கள்... "பாலு" என்று இசைத்துறை நண்பர்கள் கூப்பிடுவார்கள்... "பாலுகாரு" என்று ஆந்திர மக்கள் சொல்லுவார்கள்.. நமக்கு எப்பவுமே "பாடும் நிலா பாலு"தான்!!
சாதனையின் உச்சத்திற்கும் மேல் ஏதாவது இருக்குமா என்று உலகில் நாம் தேடினால், அங்கே இந்த ஐஸ்கிரீம் குரல்காரர் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருப்பார். வாழ்நாளெல்லாம் ராகமும் தாளமுமாக பின்னி கிடந்தவர்.. சரணமும், பல்லவியுமாக நடமாடி கொண்டிருந்தவர்.. பாட்டும், நோட்டுமாக நன்றிகளை செலுத்தி கொண்டே இருந்தவர்!
"உங்க பேன்ட் ஈரமாகிடும்.. உங்களுக்கு தைரியம் இருந்தால்".. கார்ட்டூனிஸ்ட் பாலா மீது குஷ்பு பாய்ச்சல்
சாதனைகள்
பாடிய பாட்டுக்கள், குவித்த விருதுகள், செய்த சாதனைகள், எல்லாமே நாம் அறிந்தவை என்றாலும், இவரது குணம் இன்னமும் மலைக்க வைத்து கொண்டே இருக்கிறது. சின்ன குழந்தைகள், வயதில் குறைந்தவர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார்.. அவர்களின் சாரீரத்தை கேட்டாலே, சரீரத்துடன் சாஷ்டாங்கமாக விழுந்துவிடுவார். பெரிய ரசிகர் என்றாலும் சரி, சிறிய ரசிகர் என்றாலும் சரி, யார் ஆட்டோகிராஃப் கேட்டாலும் முகம் சுளிக்காமல் போட்டு தந்துவிடுவார்.
ஸாரி.. ஸாரி
யார் உதவி என்று யாரும் கேட்டு வந்தாலும் மறுக்காமல் தம்மால் இயன்ற உதவியை செய்து தருவார்.. யாரையும் வெறுங்கையால் திருப்பி அனுப்பியது இல்லை. அதுபோலவே, வெளியூருக்கு ரிக்கார்டிங் போனாலும் சரி, கச்சேரிக்கு போனாலும் சரி, தன்னுடைய டிரைவர், பிஏ-க்களை தன்னுடன்தான் சேர்ந்து சாப்பிடணும் என்று சொல்லிவிடுவாராம்.. யார் சந்திக்க வந்தாலும், "ஸாரி.. ஸாரி.. ரியலி ஸாரி.. ரொம்ப நேரமாக காக்க வெச்சுட்டேனா என்று கேட்டுவிட்டு, என்ன சாப்பிடறீங்க, மொதல்ல காபி சாப்பிடுங்க" என்று உபசரித்தபிறகுதான் பேச்சையே தொடங்குவார்.
டிராயிங்
இத்தனை உயரத்துக்கு சென்றபோதிலும், சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை வீட்டுக்கு வந்தது இல்லையாம்.. அதாவது வீடு வேறு, தொழில் வேறு என்பதை தனியாக வகுத்து வைத்து பயணித்து வந்துள்ளார்.. நன்றாக டிராயிங் வரைவார்.. புல்லாங்குழல் வாசிப்பார்.. வழக்கமாக நைட் நேரத்தில் புல்லாங்குழல் சத்தம் கேட்டாலே அது எஸ்பிபிதான் வாசிப்பார் என்று அர்த்தம். யாராவது தயாரிப்பாளர்கள், பணப்பற்றாக்குறையால் எஸ்பிபியை பாட வைக்க முடியாமல் போனால், கங்கை அமரனிடம் சொல்வார்களாம்.. கங்கை அமரனும் இவரிடம் வந்து மெல்ல கோரிக்கை வைக்க, "பாவம்..டா.. பாடி குடுத்துடறனே" என்று சொல்லி தட்டாமல் பாடி தந்து உதவுவார்.
சாராம்சம்
'இத்தனை கனமான உடலை வைத்துக்கொண்டு தம் கட்டி, 'மண்ணில் இந்தக் காதலின்றி...', 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்..." பாடல்களை எப்படி பாடினார் என்பதே நமக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது...
"கண்மணியே காதல் என்பது கற்பனையோ" என்ற பாட்டிலேயே மூச்சு பயிற்சிகள் தென்பட்டன.. இந்த பாடல்களில் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் மட்டுமின்றி, அந்த வார்த்தைகளின் ஜீவனையும், அதன் அடிநாதத்தையும், சாராம்சம் குறையாமல், ரசம் குறையாமல் நமக்குள் லாவகமாக கடத்தியிருந்தார்.
ஜதிகள்
இவர் பாடாத உணர்வே இல்லை.. பாடாத காதலே இல்லை.. பாடாத தமிழே இல்லை.. சங்கராபரணம் ஆலாபனைகளும், சலங்கை ஒலியின் ஜதிகளும் இவருக்கு தண்ணீர் பட்ட பாடு.. ஒவ்வொரு பாட்டிலும் ஊடுருவி ஒலிக்கும் விக்கலும், முக்கலும், முனகலும், சிரிப்பும், அலுப்பும், தவிப்பும், சலிப்பும் என அவ்வளவையும் நமக்குள் முழுமையாக கொடுத்து எடுத்தது இந்த குரல்!
அத்தியாயம்
எஸ்பிபியின் குரல் இயற்கையின் ஒரு பகுதி.. இசையின் மறுபகுதி.. சாமான்ய ரசிகன் வாழ்வில் கலந்த ஒரு அத்தியாயம்... ஒவ்வொரு பாட்டும் தனக்காகவே பாடப்பட்டதைபோல ஒவ்வொருவரையும் உணர வைத்த இசை மகான்.. அந்த உணர்வு கோர்வையே அனைவரின் ஸ்பரிசத்தையும் தொட்டு சிலிர்க்க வைத்தது!! இனிமையும், களிப்பும், காதலும், தமிழும், ததும்பி நிறையும் எஸ்பிபியின் குரல், தமிழ் சினிமாவின் கம்பீரமான அடையாளம்!