ரிப்போர்ட்.. எடப்பாடியின் ‘கட் அண்ட் ரைட்’ முடிவால் டென்ஷன் ஆன டெல்லி.. காத்திருக்கு சிக்கல்?
சென்னை : பாஜகவின் அறிவுரையை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து புறந்தள்ளி வருவதை பாஜக தலைமை ரசிக்கவில்லை என்றும், இதனால், விரைவில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
சசிகலா, தினகரன், ஓபிஎஸ், ஈபிஎஸ் அனைவரும் ஒரே அணியில் செயல்பட வேண்டும் என விரும்பும் பாஜக, மூவரை கிட்டத்தட்ட ஓகே சொல்ல வைத்து விட்டது. எடப்பாடி பழனிசாமி மட்டுமே முரண்டு பிடித்து வருகிறார்.
இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமி விரும்பாததன் காரணமாகவே, அவரை புறக்கணிப்பது போல் நடந்து கொண்டது டெல்லி.
அதன்பிறகு, டெல்லியை நோக்கி பல்வேறு முயற்சிகளை ஈபிஎஸ் மேற்கொண்டு வந்தாலும் இந்த ஒரு முடிவில் மட்டும் பிடிவாதமாக இருந்து வருகிறார். இது டெல்லி தலைமைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பிளவை ரசிக்காத பாஜக
அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, 2024 தேர்தலில் தங்களுக்கும் பாதகமாக அமையும் என்பதை உணர்ந்துள்ள பாஜக, ஒன்றுபட்ட அதிமுகவே தங்கள் விருப்பம் எனக் கூறிவிட்டது. அதன் காரணமாகவே, ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலை டெல்லி பாஜக விரும்பவில்லை. இதன் காரணமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது அதிருப்தியையும் காட்டியது டெல்லி தலைமை. பாஜகவின் விருப்பத்தை ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றுக்கொண்டார். ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரும் சமரச முடிவுக்கு வந்துள்ளனர்.

சொன்னபடி கேட்ட ஓபிஎஸ்
ஆகஸ்ட் 17ஆம் தேதி வந்த ஐகோர்ட் தனி நீதிபதியின் தீர்ப்புக்குப் பிறகு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். பழைய கசப்புகளை மறந்து செயல்படுவோம், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் ஓபிஎஸ். ஆனால் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்தார். சசிகலா, தினகரன் ஆகியோர் ஓபிஎஸ்ஸின் சமாதான முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

கட்டையைப் போட்ட எடப்பாடி
தீர்ப்பு வந்த நாளில் இருந்தே, ஓபிஎஸ் தரப்பினர் எடப்பாடி பழனிசாமியோடு பேசுவதற்கு முயன்று வருகின்றனர். ஆனால், அவர்களோடு பேசத் தயாராக இல்லை என ஈபிஎஸ் முரண்டு பிடித்து வருவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸின் வலது கரமான வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி தரப்பின் முக்கிய புள்ளிகளிடம் போனில் பேசி இருக்கிறார். இதற்கு மேலும் பூசலை தொடரவேண்டாம், இணைந்து செயல்படுவதுதான் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் நல்லது எனப் பேசியும், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதனை திட்டவட்டமாக நிராகரித்தது.

நேரம் பார்த்து
எடப்பாடி பழனிசாமி பேச்சை எடுத்தாலே கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன் கூட, திடீரென சாஃப்ட் ஆகப் பேசி சமாதானக் கொடி பறக்கவிட்டார். சசிகலா தரப்பும் கூட, ஈபிஎஸ் ஆதரவாளர்களாக இருக்கும் முக்கியப் புள்ளிகள் மூலம் மூவ் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி துளியளவும் இறங்கி வரத் தயாராக இல்லை. அதற்கு ஏற்றார்போல், மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பும் ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்ததால், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் பழனிசாமி.

கட் அண்ட் ரைட்
இன்று திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க ஒரு குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. தொண்டர்கள்தான் இப்போது அ.தி.மு.க-வை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். தொண்டர்களால் நடத்தப்படும் அ.தி.மு.க-வில் தலைவர்களுக்கு இடமில்லை. தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நானும் தொண்டன் என்ற முறையில்தான் இங்கு வந்திருக்கிறேன். தலைவர் என்ற முறையில் வரவில்லை." என கட் அண்ட் ரைட்டாகப் பேசியுள்ளார்.

டெல்லிக்குப் போகும் ரிப்போர்ட்
அதிமுக விவகாரம் அனைத்தும், பாஜகவுக்கு நெருக்கமான ஒரு பத்திரிகை புள்ளி மூலம் டெல்லியின் கவனத்திற்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மூவரும் வெகுவாக இறங்கி வந்த பின்னரும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விடாப்பிடியாக இருந்து வருவதும் டெல்லியின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதனால், சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடிக்கு நெருக்கமான புள்ளிகளிடம் மீண்டும் ஆலோசனை கூறி அனுப்பினார்களாம்.

நோ சேஞ்ச்
ஆனாலும், எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் எந்த மாற்றமும் இல்லாத தகவலும் டெல்லியின் கவனத்திற்குச் சென்றுள்ளது. ஒரு இன்ச் கூட எடப்பாடி பழனிசாமி நகரவில்லை, இப்போதும் வீம்பாகத்தான் பேசி வருகிறார் என டெல்லிக்கு தகவல் கொடுத்து வருகிறாராம் பத்திரிகை புள்ளி. பாஜக தலைமையின் அறிவுரையை ஈபிஎஸ் கேட்காமல் முரண்டு பிடித்து வருவதை பாஜக மேலிடம் சுத்தமாக ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தேர்தல் குறித்து அறிவுரை கூறியும் ஈபிஎஸ் ஏற்காமல் இருந்து வருவது கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

செக் வைக்க
இதனால், எடப்பாடி பழனிசாமியை பணிய வைக்கும் வகையில் 'செக்' வைக்கும் நடவடிக்கைகளில் டெல்லி இறங்கும் என தகவல் கசிந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வமும், பாஜக தலைமை கொடுத்துள்ள கிரீன் சிக்னலால் நம்பிக்கையுடன் இருந்து வரும் நிலையில், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக டெல்லி என்ன ஆக்ஷனில் இறங்கப்போகிறது என்பது தான் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications