9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்.. வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது!
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி அக்.6, அக். 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது.
அலுவலக நாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். வரும் 23 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக தலைவர் ஜி கே மணி அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களின் துணை பொதுச் செயலாளர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கட்சியின் வளர்ச்சி கருதி அதிமுகவின் கூட்டணியிலிருந்து வெளியே தனித்து போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டது.
'அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது..' 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி.. பாமக அறிவிப்பு
அதன்படி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்றும் , நாளையும் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. அது போல் அதிமுகவும் இன்று விருப்பமனுக்களை பெறுகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினருக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினருக்கு 3 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விருப்ப மனு அளித்துள்ளவர்கள் அதற்கான அசல் ரசீது மற்றும் நகலினை, மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியன தனித்து போட்டியிடுகிறது. அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கவில்லை. அது போல் தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால் அது தனித்து போட்டியிடுகிறதா இல்லை கூட்டணி அமைக்குமா என தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் நாம் யாரென நிரூபிப்போம் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். எனவே என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.