வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 54% அதிகம்...சென்னையில் 77% கூடுதல் - பாலச்சந்திரன்
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 54% அதிகம் பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 77% அதிகமாக பொழிந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவான 20 சென்டிமீட்டருக்கு பதில் 39 செமீ பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இது இயல்பை விட 54% அதிகம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் அக்டோபர் 1 முதல் இதுவரை 47 செ.மீ மழை பதிவானது. இது இயல்பைவிட 77% அதிகம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். கடந்த மாதம் 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே மழை வெளுத்து வாங்கியது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் கடந்த 7ஆம் தேதியன்று விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது.
தொடர்ந்து 5 நாட்களாக மழை விடாமல் கொட்டி வருவதால் எங்கும் பெருவெள்ளம் தேங்கியுள்ளது. இதனிடையே
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மதியம் 4 மணி வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 100கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட கரையோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40முதல் 45கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மிக கனமழை
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யலாம்.வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

77 சதவிகிதம் அதிகம்
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் இதுவரை 20 செ.மீ.க்கு பதில் 39 செ.மீ மழை பதிவானது. இது இயல்பை விட 54% அதிகமாகும். சென்னையில் அக்டோபர் 1 முதல் இதுவரை 23 செ.மீ.க்கு பதில் 47 செ.மீ மழை பதிவானது. இது இயல்பைவிட 77% அதிகம் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
Recommended Video

எங்கெங்கு தடை
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் 9 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கே.கே.நகர் - ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர் - டாக்டர் சிவசாமி சாலை, செம்பியம் - ஜவஹர் நகர் சாலை, ஈவிஆர் சாலையில் காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி - முல்லைநகர் பாலம், பெரவள்ளூர் - 70 அடி சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு, அம்பேத்கர் சாலையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications