பாஜக வேரூன்ற அடித்தளம்.. பெரியாரை கொச்சைப்படுத்துகிறார்கள்.. சீமானை மறைமுகமாக தாக்கிய திருமாவளவன்!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக வேரூன்றுவதற்கு சிலர் அடித்தளம் அமைத்து கொடுப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் சீமானை மறைமுகமாக விமர்சித்துள்ளார். பெரியாரை கொச்சைப்படுத்துகிறார்கள் என்று கூறிய அவர், முற்போக்கு சிந்தனைக்கு எதிரானவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். பெரியாரை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் பிரபாகரன், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுடன் ஒப்பிட்டு நேருக்கு நேராக நிறுத்தி பேசிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் சீமானுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சீமானின் பேச்சிற்கு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோர் ஆதவு தெரிவித்துள்ளனர். பெரியாரை விமர்சித்ததால் ஈரோட்டில் சீமான் பரப்புரை மேற்கொண்ட போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இன்றும் கூட சீமான் பெரியாரை விமர்சிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று குடியரசுத் தினத்தை முன்னிட்டு 'இந்திய குடியரசும் டாக்டர் அம்பேத்கரும்' என்னும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது திருமாவளவன் பேசுகையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்து கொண்ட சனாதன சக்திகள் ஆட்சியில் இருக்கிறார்கள்.
அவர்கள் தமிழ்நாட்டிலும் வேரூன்ற பார்க்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் வேரூன்றுவதற்கு சிலர் அடித்தளம் அமைத்து கொடுக்கிறார்கள். பெரியாரை கொச்சைப்படுத்துகிறார்கள். பெரியாரை விமர்சிக்கிறார்கள். பெரியாரும், அம்பேத்கரும் ஒரே திசைவழியில் சிந்தித்தவர்கள். ஒரே திசைவழியில் பயணித்தவர்கள்.
ஒரே இலக்கை நோக்கி பயணித்தவர்கள். அந்த ஒற்றை இலக்கு சமத்துவம் தான். பெரியாரை கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் இவ்வளவு கோட்பாடுகளையும் தகர்க்கிறார்கள் என்று பொருள். அம்பேத்கரையும், மார்க்ஸையும் புறக்கணிக்கிறார்கள் என்பதே பொருள். அவர்கள் முற்போக்கு சிந்தனைக்கு எதிரானவர்கள் என்றே கருத வேண்டும்.
நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேடிக்கை பார்க்கக் கூடியவர்களாக இருக்க கூடாது. நாம் எப்போதும் அடையாள அரசியலைப் பிடித்து கொண்டு தொங்குபவர்கள் அல்ல. அம்பேத்கரை நாம் சாதிய அடையாளமாகவோ, மத அடையாளமாகவோ புரிந்து கொள்ளவில்லை. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் மூவரையும் கோட்பாட்டு அடையாளமாக தான் பார்க்கிறோம்.
சமத்துவத்திற்கான வழிகாட்டும் அடையாளங்கள் அவர்கள். அப்போது தான் நாம் தேசத்தை பாதுகாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பின்னரே நாம் தமிழர் கட்சியின் சீமான் தொடர்ச்சியாக பெரியாரை விமர்சித்து வருவதாகவும் சில அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications