ஏய்! இங்க வா.. ஊடகம் இருந்தால் கேள்வி கேட்கும் தகுதி வராது.. செய்தியாளரிடம் மீண்டும் சீமான் ஆவேசம்
சென்னை: செய்தியாளரை தரக்குறைவாக பேசியதற்காக தனக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் தெரிவித்த கண்டனத்தை வரவேற்பதாக தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதே நேர்காணலில் தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் ஆவேசமாகவும் ஒருமையிலும் பேசி இருக்கிறார். சிறிய ஊடகம் வைத்து இருந்தால் மட்டும் கேள்வி கேட்கும் தகுதி வந்து விடாது என்று தெரிவித்த சீமான், அந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பேசி உள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தன்னை நோக்கி கேள்வி எழுப்பிய செய்தியாளரை ஒருமையில் பேசி பைத்தியக்காரன் என்று திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனத்தை பதிவு செய்திருந்தது.
கோபத்தில் கொந்தளித்த சீமான்.. மைத்துனரை இழுத்த செய்தியாளரிடம் தரக்குறைவாக பேச்சு - சிஎம்பிசி கண்டனம்
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம்
அதில் "சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளர் கரிகாலனை தரக்குறைவாக பேசி, மிரட்டியதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநாகரீக போக்கை அவர் கைவிட வேண்டும். உடனே மன்னிப்பும் கேட்க வேண்டும்." என்று குறிப்பிட்டு இருக்கிறது.
தமிழ்நாடு டிஜிட்டல் ஊடக சங்கம்
அதை தொடர்ந்து, தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கமும் சீமானை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், "பத்திரிகையாளர் திரு.கரிகாலன் அவர்களைத் தரக்குறைவாகப் பேசிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை, தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உள்நோக்கம் கற்பிக்கும் மனநிலை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், இன்று (23 12 2022) அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ROOTS TAMIL ஊடகத்தின் செய்தியாளர் திரு.கரிகாலன் கேள்வி எழுப்பிய போது, இடைநிறுத்தி தகாத வார்த்தைகளிலும் ஒருமையிலும் பேசியது கண்டிக்கத்தக்கது. மேலும் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு உள்நோக்கம் கற்பிக்கும் மனநிலை மிக மோசமானது.
அண்ணாமலையும் சீமானும்
சமீப காலமாக ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து இதுபோல அவமதிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. பிஜேபி மாநிலத் தலைவர் திகு. அண்ணாமலை அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு விலை பேசி எலம் விட்டதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆகவே, சீமான் அவர்களது இந்தச் செயலை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
வருத்தம் தெரிவிக்க வேண்டும்
கேள்விகளே நம்மைச் செதுக்கும்" என மேடைகளில் பேசும் திரு. சீமான் அவர்கள், அதற்குத் தகுந்தாற்போல நடக்கும் வகையில், தன்னுடைய செயல்பாட்டிற்கு வருந்தத்தைப் பதிவு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.
நீ இங்கே வா
அப்போது அவரிடம், பத்திரிகையாளர் சங்கங்கள் நேற்று அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், "அந்த கண்டனத்தை மனதார வரவேற்கிறேன். சிறிய ஊடகம் வைத்து இருந்தால் உனக்கு கேள்வி கேட்கும் எல்லா தகுதி வந்து விட்டது என்ற நிலையிலிருந்து மாற்ற வேண்டும். நீ வந்து இங்கே நில்லு. கேள்வி கேள்வியாக இருக்க வேண்டும். நீ ஏதோ ஒரு முடிவில் வந்திருக்க. நீங்க தொடர்ச்சியா கண்டிங்க. மகிழ்ச்சியா கைகூப்பி வரவேற்கிறேன்.
ஒருமையில் பேசிய சீமான்
அதேபோல் சாதிவாரி இடஒதுக்கீடு தொடர்பாகவும், யாதவர் சமுதாயம் தொடர்பாகவும் பேசிய சீமானிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், "யாதவ் என்றால் என்ன நீ சொல்லு. பொருள் சொல்லு தம்பி. ஏய்.. நீ கேள்வி கேட்ட. நான் கேள்வி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்." என்று ஒருமையில் பேசினார். இது மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.