நாம் தமிழர் கட்சியில் திருமகன் ஈவெரா சேர போனாரா? சீமான் பேசுவது அநாகரீகம்..ஜோதிமணி சாடல்
திருமகன் ஈவேரா பற்றி சீமான் பேசுவது அநாகரிகமானது என்று எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: சீமானின் மக்கள் விரோத அரசியல் மீது திருமகன் ஈவெரா கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை என்று ஜோதிமணி கூறியுள்ளார். திருமகன் ஈவேரா அவர்களைப் பற்றி சீமான் இப்படிப் பேசுவது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது. சீமானின் மக்கள் விரோத அரசியல் மீது திருமகன் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை என்றும் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா,உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். காலியாக உள்ள சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக இரு அணிகளாக பிரிந்து போட்டியிடுகிறது. இதுவரை வேட்பாளர் யார் என அதிமுக தரப்பில் அறிவிக்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். தேமுதிக, அமமுக தனித்தனியாக களமிறங்குகிறது.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு மரப்பாலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனை பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை இந்தக் கூட்டத்தின் மூலமாக கூறுகிறேன். இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் முதலில் நம்ம கட்சியில் சேருவதற்காகத்தான் வந்தார். அப்புறம் அவருடைய ஐயா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்ன சொன்னாரோ தெரியவில்லை. சரி நீ அங்கேயே இருப்பா என்று கூறி விட்டேன்.
உங்களுக்கு தெரியாது.. நாம் தமிழர் கட்சியில் இணைய என்னை சந்தித்தார் திருமகன் ஈவெரா.. சீமான் தகவல்
அவர் இறந்ததில் எனக்கு மிகுந்த மனத்துயரம் தான். அவருடைய தந்தையிடம் அவர் காலமானதற்காக துக்கம் விசாரித்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இத்தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக திருமகன் ஈவெரா பணியாற்றி இருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர் சட்டசபையில் ஏதாவது மக்கள் பிரச்னை பற்றி பேசியதாக கேள்விபட்டீர்களா?. இப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று சட்டசபைக்கு போனால் அவரும் பேசப் போவதில்லை என்று கூறினார். சீமானின் இந்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினராக இருந்து,சிறப்பாக மக்கள் பணியாற்றி,மக்களிடம்,பெயரும் புகழும் பெற்று எதிர்பாராமல் மறைந்த திருமகன் ஈவேரா அவர்களைப் பற்றி சீமான் இப்படிப் பேசுவது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது என்று பதிவிட்டுள்ளார் ஜோதிமணி. சீமானின் மக்கள் விரோத அரசியல் மீது திருமகன் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை என்றும் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.