இலவசம் ஏமாற்று வேலை.. சீறும் சீமான்.. முதல்வருக்கு வரிசையாக கேள்வி கணைகள்
சென்னை: தமிழகத்தில் மோசமான நிதிநிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மைக் காலமாக தேசிய அரசியல் முதல் தமிழக அரசியல் வரை இலவசங்கள் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அவை சமூக நீதி திட்டங்கள் என்றும், மறுபுறம் பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இலவசங்கள் தேவையில்லாதது, இலவசங்களால் தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமடைகிறது என்று பேசி வருகின்றனர்.
இலவசங்கள் குறித்த விவாதம் தொடங்கியதில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தீர்ப்புதான் வழங்கப்படுது.. 'நீதி இல்லை’ - அதிமுக வழக்கு தீர்ப்பு பற்றிய கேள்விக்கு சீமான் பதில்!
விரைவில் உரிமைத்தொகை
இதனிடையே அண்மையில் கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு இலவச பேருந்து ,பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளன. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் உரிமை தொகை நிதி நிலைமை சரியானவுடன் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
சீமான் அறிக்கை
இந்த நிலையில் மோசமான நிதிநிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டைக் கடந்தும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகையை நிதிநிலை சரியானவுடன் வழங்குவோம் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வரி உயர்வு
அப்படி என்றால் கலால் வரி, சொத்துவரி என்று பலமடங்கு வரிச் சுமையை மக்கள் தலையில் சுமத்தி, அதன் மூலம் அரசின் வருமானம் பெருகிவிட்டது என்று நிதியமைச்சர் கூறுவது பொய்யா? அல்லது இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியில் அபார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது பொய்யா?
இலவசம் எனும் ஏமாற்று
பல மடங்கு வரியை உயர்த்தியும், மதுவிற்பனையை இருமடங்கு அதிகரித்தும் நிதி நிலைமை சரியாகவில்லை என்றால், அத்தனை மோசமான நிதி நிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும். இலவசம் என்பது மறைமுகமான அடித்தட்டு மக்களின் வரிப்பணம்தானே. அவர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கே கொடுத்துவிட்டு எதற்கு இலவசம் என்று ஏமாற்ற வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.