சொன்னத செய்யுங்க.. எங்களை ஏமாத்திடாதீங்க.. முதல்வரை நெருக்கும் ஓபிஎஸ் தரப்பு.. அதான் விஷயமா?
சென்னை : கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் இருந்து திமுக அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
Recommended Video
தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் சொன்னதை விரைந்து செய்ய வேண்டும், குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.
செங்கல்பட்டில் அரசு பஸ்-லாரி மோதி பயங்கர விபத்து.. 6 பேர் பலியான சோகம்.. பிரதமர் மோடி இரங்கல்
கோடநாடு வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், இந்த அஸ்திரத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீவிரமாக கையில் எடுத்து களமாடி வருகின்றனர்.
நெருங்கிய எடப்பாடி
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றுவதற்கான ரேஸில் எல்லைக்கோட்டுக்கு அருகில் சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த பலரும் இன்று ஈபிஎஸ் பக்கம் இருக்கின்றனர். பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் தடை கோரிய வழக்கில் ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு ஐகோர்ட் தீர்ப்பு வரவிருக்கிறது. அதன்பிறகு பொதுச் செயலாளராக ஈபிஎஸ்ஸுக்கு முடிசூட்டுவது தான் பாக்கி என உற்சாகமாக இருக்கின்றனர் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.
கோடநாடு விவகாரம்
இந்நிலையில், கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி குறிவைக்கப்பட்டுள்ளார். நாளுக்கு நாள் கோடநாடு விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில், இதுவரை இதற்காக குரல் கொடுத்திராத அதிமுகவினர் பலரும் கோடநாடு மர்ம முடிச்சை கையில் எடுத்துப் பேசி வருகின்றனர். திமுக அரசுக்கும் கோடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அடுத்தடுத்து
ஓ.பி.எஸ்ஸின் மகன் ஜெயபிரதீப், ஜெயலலிதா வீட்டில் நடந்த அநீதிக்கு நியாயம் கேட்க எங்கள் ஜெயலலிதாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ், கோடநாடு அரக்கனை கைது செய்ய வேண்டும் எனப் பேசுகிறார். ஓபிஎஸ்ஸின் வலதுகரமான அதிமுக துணை பொதுச் செயலாளர் வைத்திலிங்கம், கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எண்ணம் எனத் தெரிவித்துள்ளார்.
கோவை செல்வராஜ்
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் அவரது மறைவுக்கு பிறகு ஐந்து கொலைகள் நடந்திருக்கின்றன. அங்கு இருக்கும் பொருட்கள் எல்லாம் திருடப்பட்டுள்ளன. கட்சியின் கட்டுப்பாடுகளை மதித்துதான் சட்டமன்றத்தில் கோடநாடு வழக்கு குறித்து பேசியதைக் கண்டித்து அனைவரும் வெளிநடப்பு செய்தோம். அந்தக் கொலை சம்பவம் நடைபெற்ற பிறகு கொடநாடு பங்களாவில் காவல்துறையின் பாதுகாப்பு இல்லை. அது ஒரு தனியார் சொகுசு வீடு. அதனால், அங்கு காவல்துறை பாதுகாப்பு தர முடியாது.
விரைந்து கண்டுபிடியுங்கள்
சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு கொலை வழக்கு சம்பவத்தை உடனடியாக விசாரிப்பேன் என்றார். ஆனால், அந்த வழக்கை இன்னும் தீவிரமாக கையில் எடுக்கவில்லை. எனவே, கொடநாடு கொலை வழக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறையாக விசாரித்து உடனடியாகக் குற்றவாளியைக் கண்டறிந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என வலியுறுத்தினார்.
விசாரணை தீவிரம்
அதற்கேற்றார்போல, அரசும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான மணல் காண்டிராக்டர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில் தனிப்படை போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். அவர் வீடு அலுவலகங்களில் 2017ல் நடந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை முன்வைத்து விசாரணை நடைபெறுகிறது. இது ஈபிஎஸ் தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.