சட்டசபையில் சொன்னபடி ரூ.50 லட்சத்தை அரசுக்கு அனுப்பிய ஓபிஎஸ்.. மகன்களின் கணக்குகளில் இருந்து டி.டி!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம், தனது மூத்த மகன் ரவீந்திரநாத் மற்றும் இளைய மகன் ஜெயப்பிரதீப் ஆகியோரின் வங்கி கணக்கில் இருந்து தலா 25 லட்சம் என மொத்தம் 50 லட்சத்திற்கான டி.டியை நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசின் சார்பாக அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அப்போது, அரசின் முயற்சிகளுக்கு தனது குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இலங்கைக்கு உதவுவதாக சட்டசபையில் அளித்த வாக்குறுதியின்படி ரூ. 50 லட்சத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார் ஓபிஎஸ்.
ஏ கருப்பா! 6.30 மணிக்கு வண்டியை விட்ட ஓபிஎஸ்.. உள்ளே கேட்ட
தமிழகம் சார்பில் நிதி உதவி
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கடந்த ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். தமிழக அரசுக்கு பொதுமக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி பெறப்பட்ட நிதி உதவிகள் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் பல கோடி மதிப்புள்ள பொருள்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.
ஓபிஎஸ் உறுதி
முதல்வரின் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தனது குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் சட்டசபையில் அளித்த வாக்குறுதியின் படி தனது மூத்த மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் இளைய மகன் ஜெயப்பிரதீப் ஆகியோரின் வங்கி கணக்குகளில் இருந்து தலா 25 லட்சம் என மொத்தம் 50 லட்சத்திற்கான டி.டி-களை நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு பன்னீர்செல்வம் நேற்று அனுப்பி வைத்துள்ளார்.
ஓபிஎஸ் அறிக்கை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கை நாட்டிற்கு நிதி உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அப்போது எனது சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தேன்.
ரூ.50 லட்சத்திற்கு டி.டி
இந்த நிலையில் எனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வங்கிக் கணக்கிலிருந்து 25 லட்சத்திற்கு டிடி, எனது இளைய மகன் ஜெயபிரதீப் வங்கி கணக்கில் இருந்து 25 லட்சத்திற்கு டிடி என மொத்தம் 50 லட்சத்திற்கு டிடி எடுத்து நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கு அனுப்பி உள்ளேன். இதனை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.