‘இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி’.. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பற்றி ஓபிஎஸ் சொன்ன கருத்து!
சென்னை : ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது அதிமுகவின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், அதற்கென குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரையின்படி சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
E(O)PS means End of Paneer Selvam.. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐடி விங்!
அதிமுக கொண்டு வந்த சட்டம்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் பலரது பணத்தையும் உயிரையும் குடித்து வருவதால், அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். அதனடிப்படையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், தமிழக அரசின் தடை ரத்து செய்யப்பட்டது.
திமுக அரசு சட்டம்
தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகள் வெகுவாக அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும், வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு ஜூன் 27ஆம் தேதியன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
ஆளுநர் ஒப்புதல்
அதன்படி சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஆளுநர்ஒப்புதல் அளித்துவிட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவித்துள்ளது.
சட்டமாகிறது
பணத்தை வைத்து சூதாட்டங்களில் ஈடுபடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இந்த அவசரச் சட்டம் மூலம் தடை ஏற்படும். அக்டோபர் 17- ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இது சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
ஈபிஎஸ் அணி
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க கோரிய அவசர சட்டம், காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.' என ட்வீட் செய்தார்.
அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி" எனப் பதிவிட்டுள்ளார்.