தமிழ்நாடு உள்ளே வர இ-பாஸ் கட்டாயம்.. ஓமிக்ரான் பரவலால் விமான பயணிகளுக்கு கெடுபிடி!
உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஓமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம் என இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த ஒரு பயணிக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 12 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருக்கலாம் என அறிகுறிகளை வைத்து சந்தேகத்தில் இருக்கின்றனர்.
1 ஓமிக்ரான்.. 12 சந்தேக கேஸ்கள்.. தமிழ்நாட்டில் மீண்டும் வருமா லாக்டவுன்? தயார் நிலையில் பெட்கள்!
அது போக ஆரணி வந்த வெளிநாட்டு பயணிக்கும் ஓமிக்ரான் அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போக மேலும் 4 பேர் இன்று ஓமிக்ரான் அறிகுறி உள்ள நோயாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இ பாஸ் கட்டாயம்
இதனிடையே உள்நாட்டு விமான பயணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 டோஸ் தடுப்பூசி
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள், அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர்.
14 நாட்கள் தனிமை அவசியம்
சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில விமான பயணிகள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை அளிக்கப்படுகிறது.
மீண்டும் லாக்டவுன்
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். ஓமிக்ரான் அச்சம் காரணமாக மீண்டும் லாக் டவுன் விதிக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள், குறிப்பாக ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அவசியம் ஏற்பட்டால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடலாம். இருந்தாலும் மாநிலம் விட்டு மாநிலம் வர இ-பாஸ் தேவை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மட்டுமே கொண்டு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.