ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ரெடியாகிறது.. கேஸ் போட்டும் தடுக்க முடியாதபடி இருக்கும்- அமைச்சர் ரகுபதி
சென்னை: நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இதனால், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசின் குழு
இதனை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றனர்.

அறிக்கை சமர்பிப்பு
பின்னர் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் பல்வேறு முக்கிய பரிந்துரைகளை நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியது.

மக்கள் கருத்து
இதனால் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க விரைவில் தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் ரகுபதி
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளன. இந்திய அளவில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டு வரப்படும். நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications