ஜூலை 11 பொதுக்குழு செல்லும்- தீர்மானம் செல்லாது: உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் அணி விளக்கம்
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் அணி புதிய விளக்கம் தந்துள்ளது.
சென்னை: அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் அணி (ஓபிஎஸ்) புதிய விளக்கம் கொடுத்து வருகிறது. அதாவது கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு சட்டப்படி செல்லும் என தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்; ஆனால் ஜூலை 11 சட்டப்படி நடத்தப்பட்ட பொதுக்குழுவின் தீர்மானங்கள் செல்லும் என்ற வார்த்தை தீர்ப்பில் இடம்பெறவில்லை என்கிறது ஓபிஎஸ் அணி.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு கோஷ்டிகள் உருவாகின. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி சென்னையில் இபிஎஸ் கோஷ்டி அதிமுக பொதுக்குழுவைக் கூட்டியது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். அதிமுகவில் அதுவரை இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இபிஎஸ் அணியின் ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லும் என்பதால் அன்றைய கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது; ஓபிஎஸ் நீக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் செல்லுபடியாகும் என்பதாகவே கருதப்படுகிறது. இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இபிஎஸ் தரப்பு பட்டாசு வெடித்தும் பாலபிஷேகம் செய்தும் கொண்டாடித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்தே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஓபிஎஸ் அணியின் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் தரப்பு கூறியதன் சாராம்சம்: ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டப்படி செல்லாது என்பதுதான் வழக்கு. அதாவது ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை; ஆகையால் அந்த பொதுக்குழுவை கூட்டியது செல்லாது என்பது எங்கள் வாதம். உச்சநீதிமன்றமோ, ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் சட்டபடி செல்லும் என கூறிவிட்டது. அதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் மாற்று கருத்தும் இல்லை.
ஆனால் ஜூலை 11ந்- தேதி பொதுக்குழு சட்டப்படி செல்லும் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தீர்மான விவகாரங்களுக்குள் ஒருபடி கூட உள்ளே செல்லவில்லை. தீர்மானங்கள் குறித்து சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் என்றுதான் தெரிவித்துள்ளது. ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என கூறவில்லை. ஆகையால் சட்டப்படி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும்; ஆனால் தீர்மானங்கள் செல்லாது. இதனைத்தான் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஆகையால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டு பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் உள்ளிட்டவைகளை நடத்தும் போது நாங்கள் சட்டமேல் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு ஓபிஎஸ் தரப்பு கூறியிருக்கிறது.
அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்றாகிவிட்ட பிறகு பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என உச்சநீதிமன்றமே எப்படி சொல்லும்? பொதுக்குழு கூட்டம் சட்டப்படியாக கூட்டப்பட்டது என்கிற போது தீர்மானங்களும் சட்டப்படி செல்லுபடியாகத்தான் செய்யும்; ஓபிஎஸ் அணி குதர்க்கமாக பேசுகிறது என்கிறது இபிஎஸ் தரப்பு.












Click it and Unblock the Notifications