அதிரடி காட்டும் இபிஎஸ்! சட்டமன்றத்தில் அதிருப்தி அதிமுக? ஓபிஎஸ் போடும் மாஸ் ப்ளான்! புரட்சிப் பயணம்?
சென்னை : சமயோசித நகர்த்தல்கள் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ள நிலையில் அவர்கள் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் என்ற பெயரில் சட்டமன்றத்தில் செயல்படலாம் எனவும், சட்ட போராட்டங்களுக்கு இடையே தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
"நானே ராஜா நானே மந்திரி" என்பதுதான் அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை அவரது குணாதிசயம். அவர் நினைத்தால் சாதாரண தொண்டன் அன்று அமைச்சர் ஆகலாம் அமைச்சர் அடுத்த நாளே அரசியல் வாழ்வில் இருந்து தூக்கி எறிய படலாம்.
அந்த அளவுக்கு அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை அவரது கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு வந்தனர். ராணுவ கட்டுப்பாட்டோடு கட்சியையும் ஆட்சியையும் தனது கைவிரல் நுனியில் வைத்திருந்தார்.

ஜெயலலிதா மறைவு
அவரது மறைவுக்குப் பிறகு தற்போது வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைகளும் சர்ச்சரவுகள் தொடர்கிறது. ஜெயலலிதாவுக்குப் பிறகு சசிகலாவை முதல்வர் ஆக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்த நிலையில் பொதுச் செயலாளராக அவரே தொடர்வார் என்றும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. யாருமே எதிர்பாராத வண்ணம் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற போது அவருக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தார் ஓபிஎஸ். அப்போது அவருடன் சுமார் பத்துக்கும் எம்எல்ஏக்கள் இருந்தனர்.

ஓபிஎஸ் தர்மயுத்தம்
தொடர்ந்து தர்மயுத்தம் நடத்தி வந்த நிலையில் கட்சியில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் மன்னார்குடி வகையறாக்கள் நீக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்தன. கைகள் கோர்த்தாலும் இதயங்கள் கோர்க்கவில்லை என்பது போல அப்போது இருந்தே இரு தரப்பினர் இடையே சுமூகமான உறவு இல்லை என்றே கூறலாம். அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு நெருக்கமாக இருந்த கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சேலம் செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரை தன் பக்கம் இழுத்துக் கொண்டதோடு கட்சியிலும் ஆட்யிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு
இதையடுத்து தேர்தல் கூட்டணி, முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியது என கட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தனது செல்வாக்கை உயர்த்தி கொண்டே வந்தார் அதே நேரத்தில் தன் மகன் ரவீந்திரநாத்தை எம்பி ஆக்கியதைத் தவிர வேறு எதையும் ஓ.பன்னீர்செல்வம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே அமைந்தது. இது அவருக்கு ஒரு வகையில் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் தான் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்பாக்காத அளவுக்கு அவருக்கு ஆதரவாளர்கள் குவிந்தனர். அதே நேரம் கடந்த ஆண்டுகளில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்த பலரும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக திரும்பினார்.

அதிமுக பொதுக்குழு
எவ்வளவு முயன்றும் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டுவதையோ அல்லது அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்பதையோ ஓ.பன்னீர்செல்வத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஓபிஎஸ் தரப்புக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஓபிஎஸ், கேபி முனுசாமி, நடராஜன், ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது இன்றும் 21 பேர் நீக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிருப்தி அதிமுக
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும் தாங்கள்தான் அதிமுக என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறி வருகிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை வகித்து வரும் ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து அந்த பதவியை பறிக்க சபாநாயகர் தரப்பை எடப்பாடி தரப்பு அணுகி உள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் என பல சட்ட போராட்டங்களை சந்தித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் எவ்வித அடுத்த கட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் கடந்த தர்மயுத்தத்தின் போது செயல்பட்டதை போல ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏவான வைத்தியலிங்கம் அதிருப்தி அதிமுகவாக செயல்பட இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற வாதங்கள் முடிவடைந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருப்பதாகவும், அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களை சந்திக்க ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications