எதே.. கட்டாத மதுரை எய்ம்ஸில் “ஆபரேசனா”? மீம் கிரியேட்டர்போல் ப.சிதம்பரம் கலாய் - நட்டா பற்ற வைத்த தீ
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் நடப்பதாகவும், தினசரி 1,000 புற நோயாளிகளை மருத்துவர்கள் கவனிப்பதாக சொல்லி இருக்கலாமே என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பாஜக தேசிய தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா வருகை தந்துள்ளார்.
நேற்று முந்தினம் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டபின் அதை திறந்து வைப்பார் என்றும் கூறினார்.

நேரில் சென்ற எம்.பிக்கள்
உடனே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பகுதிக்கு சென்று கட்டுமானப் பணி எதுவும் தொடங்கப்படவில்லை என்று வீடியோ வெளியிட்டனர். ஏற்கனவே இருந்த செங்கல்லை கூட காணவில்லை என சு வெங்கடேசன் குற்றம்சாட்டினார்.

ஒப்பந்த புள்ளி
"உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம்." என்றும் அவர் கூறி இருந்தார்.

ப.சிதம்பரம் ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "மதுரை ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்? பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?

அறுவை சிகிச்சை
பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications