சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் அபராதம்.. ரயில்வே எச்சரிக்கை
சென்னை: சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் அரசு ஊழியர்களுக்காக மட்டும் இயக்கப்படும் நிலையில் இதில் பொதுமக்களும் பயணித்து வருகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் ரயில்வே, இனி ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 166 நாட்களுக்கு பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து சேவை கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது. சென்னையில் புறநகர் ரயில் சேவை செப்டம்பர் 5ம் தேதி முதல் தொடங்கியது. ஆனால் அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்காக மட்டுமே அந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டுக்கும், மூர்மார்க்கெட் முதல் கும்மிடிப்பூண்டி, அரக்கோணத்துக்கும் தினமும் 42க்கும் மேற்பட்ட புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில்களில் அரசு அங்கீகரித்துள்ள ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களும் அனுமதியின்றி பயணம் செய்கிறார்கள்.
இதனால் ரயில்களில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதை தடுக்க புறநகர் மின்சார ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளின் அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்து வருகிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் பயணம் செய்வதை தடுக்க முடியவில்லை.
இதையடுத்து ரயில்களில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய நடவடிக்கையாக உரிய அனுமதி அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பொதுமக்கள் யாரும் பயணம் செய்ய கூடாது. மீறி பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications