சென்னையில் சிக்கலாகும் மாடுகள்..ஒரே மாதத்தில் 1,266 தெருநாய்கள் பிடிப்பு..ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் பேட்டி
சென்னை: சென்னையில் தெருக்களை நம்பி மட்டுமே பொதுமக்கள் மாடுகளை வளர்க்க வேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை மக்களுக்கும், சென்னையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாடுகள் மாறி வருகின்றன. சாலைகளில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மறுபுறம் திடீரென குறுக்கே செல்லும் மாடுகளால் விபத்தும் ஏற்படுகிறது. அதேநேரம் மாடுகள் திடீரென சாலைகளில் செல்வோரை தாக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையை நம்பி மட்டுமே பலர் மாடுகளை வளர்ப்பதே இந்த சிக்கல்களுக்கு காரணமாக உள்ளது.

மாடுகளை சாலையில் அவிழ்த்துவிட்டால் அந்த மாட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும் இந்த திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுவது இல்லை. அதேநேரம் சென்னை முழுவதும் மாடுகளை தேடி தேடி பிடித்து அபராதம் விதிக்கும் அளவிற்கு திட்டமும் செயல்படவும் இல்லை. புகார்களின் பேரிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
இதனிடையே சென்னையில் தெருக்களை நம்பி மட்டுமே பொதுமக்கள் மாடுகளை வளர்க்க வேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை திரு.வி.க.நகர் பகுதியில் மேயர் பிரியா ராஜன், செவ்வாய் அன்று தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர், சென்னை தேனாம்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம் விளையாட்டு மைதானத்தில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேலு எம்.எல்.ஏ ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் தீவிர கொசு ஒழிப்பு பணிக்காக 3 ஆயிரத்து 319 பணியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க அனைத்து பள்ளிகள், பூங்காக்கள், அரசு கட்டிடங்களில் உள்ள தேவையற்ற மற்றும் மழைநீர் தேங்கும் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது
இதேபோல, சென்னை கடற்கரை, திருவல்லிக்கேணி, நங்கநல்லூர், அரும்பாக்கம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் மாடுகளின் பிரச்சினை அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை 163 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாடுகள் வளர்ப்பதற்கு தேவையான இடம் இல்லாமல், தெருக்களை மட்டுமே நம்பி மாடுகளை வளர்க்க வேண்டாம். இந்த மாதத்தில் மட்டும் இதுவரையில் 1,266 தெருநாய்கள் பிடிக்கப்பட்டிருக்கிறது" இவ்வாறு ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications