'பசுமை காவலர்' விவேக்... இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளுடன் பங்கேற்ற பொதுமக்கள்
சென்னை: நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை ஏந்தி சென்று, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சின்ன கலைவானர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக் (59). இவருக்கு நேற்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
கின்னஸ் உலக சாதனை: பெண்கள் பாதுகாப்புக்கு 24 மணி நேரம் கராத்தே பயிற்சி
இதையடுத்து மயங்கி நிலையில் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இறுதி அஞ்சலி
அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்திலேயே இருப்பதாகவும் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை காலமானார். இதைத்தொடர்ந்து அவரது உடல் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அரசு மரியாதையுடன் அடக்கம்
அங்குக் காலை முதலே திரைத்துறையினர், பொதுமக்கள், ரசிகர்கள் என அனைவரும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது உடலுக்குத் தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவரது பூத உடல் இன்று மாலை மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மரக்கன்றுகள்
இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். அதில் ஏராளமானோர் மரக்கன்றுகளை ஏந்தி சென்று, ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக, பத்மாவதி நகரில் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு உணவு என்ற அமைப்பு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியது.
நடிகர் விவேக்கும் மரக்கன்றுகளும்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அன்பு கட்டளையை ஏற்று, விவேக் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வந்தார். அப்துல் கலாமின் கட்டளையை ஏற்று முதல்கட்டமாக 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டார். பின், ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்குடன் அவர் மரக்கன்றுகளைத் தொடர்ந்து நட்டு வந்தார். அவரது இறுதி ஊர்வலத்திலும் பொதுமக்கள் மரக்கன்றுகளுடன் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.