முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு- ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளனும் அவரது குடும்பத்தினரும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Recommended Video
முன்னாள் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் ஆயுள் தண்டனை முடிந்த நிலையிலும் அவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படவில்லை. இதற்காக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக சட்டசபையில் அதிமுக, திமுக அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பின.

தீர்மானம்
எனினும் அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதையடுத்து பேரறிவாளன் கடந்த 2016ஆம் ஆண்டு தன்னை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

விடுதலைக்கு அச்சாரம்
இந்த நிலையில் விடுதலைக்கு அச்சாரமாக கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு மீது இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பை வெளியிட்டது. அதில் பேரறிவாளன் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திராவிடர் கழகம்
இதனால் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் திராவிடர் கழகத்தினரும் தமிழ் அமைப்புகளும், பொது மக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை இந்த தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மற்ற 6 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள், தந்தை குயில் தாசன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது பேரறிவாளனின் தோள் மீது கையை போட்டு முதல்வர் ஸ்டாலின் ஆரத்தழுவினார். இதையடுத்து அவரின் கைகளை பிடித்து இழுத்து தனது அருகே அமர வைத்துக் கொண்டார். தமிழக அரசின் அழுத்தமான வாதங்களால் தமது விடுதலை சாத்தியமானதையும் பேரறிவாளன் இச்சந்திப்பின் போது குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications