பெரியார் ஜாதி பாசத்துடன் செயல்பட்டார்? சீமான் வில்லங்க விமர்சனம்-திராவிட நெட்டிசன்ஸ்..சரமாரி பதிலடி!
சென்னை: தந்தை பெரியார் ஜாதி பாசத்துடன் (குடிபாசம்) செயல்பட்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சீமானின் இந்த விமர்சனம் இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. பெரியார் மீதான சீமானின் விமர்சனத்துக்கு திராவிட இயக்கம் சார்ந்த நெட்டிசன்கள் சரமாரியாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
1968-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழவெண்மணி கிராமத்தில் டிசம்பர் 25-ந் தேதியன்று 44 அப்பாவி பொதுமக்கள் ஒரு குடிசையில் வைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டவர்களில் 20 பேர் பெண்கள், 19 குழந்தைகளும் அடங்கும். தஞ்சை மாவட்டத்தில் நடைமுறையில் இருந்த பண்ணையார்களிடம் விவசாய பணி செய்து வந்து தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராடினர். இதனை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இப்பச்சைபடுகொலை நிகழ்த்தப்பட்டது. இப்படுகொலையை செய்தவர் கோபாலகிருஷ்ண நாயுடு. பின்னர் இந்த வழக்கில் இருந்து கோபாலகிருஷ்ண நாயுடு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரை பெரியாரின் திராவிடர் கழகத்தினர் வெட்டிப் படுகொலை செய்து பழிதீர்த்தனர். இதுதான் தமிழக வரலாற்றில் நினைவுகூறப்படுகிற கீழவெண்மணி படுகொலை சம்பவமாகும்.
கீழவெண்மணி தொடர்பாக பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இந்திரா பார்த்தசாரதி, குருதிப் புனல் என்ற நாவலை 1975-ல் வெளியிட்டார். இது பின்னர் கண்சிவந்தால் மண் சிவக்கும் திரைப்படமானது. ராமையான் குடிசை என்ற ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்திலும் கீழவெண்மணி சம்பவத்தை வெளிப்படுத்தும் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது.
கீழவெண்மணி படுகொலை சம்பவத்தின் போது தந்தை பெரியார், கோபாலகிருஷ்ண நாயுடுவை தமது ஜாதிக்காரர் என்ற பாசத்தால் ஆதரித்தார் பெரியார்; முதல்வராக இருந்த அண்ணாவும் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இந்துத்துவா கோட்பாட்டை முன்வைக்கிற வலதுசாரிகளின் நீண்டகால குற்றச்சாட்டு. இதனை திராவிடர் கழகமும் பெரியாரியவாதிகளும் தொடர்ந்து மறுத்து வந்துள்ளனர். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
இதற்கு திராவிடர் இயக்க நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அளித்த பதில்கள்- திமுகவின் மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி: கீழ்வெண்மணி சாதிய படுகொலைக்கு பின் கொலைகார சாதி வெறி பண்ணையார்களை கைது செய்தது திமுக அரசு; 1970ல் நில உச்சவரம்பு திருத்த சட்டம் கொண்டு வந்தார் கலைஞர்!உழுத விவசாயிகளுக்கே குத்தகை நிலத்தினை சொந்தமாக்கினார்! குடியிருப்போருக்கே வீட்டுமனை சொந்தம் என்ற அடிமனை பாதுகாப்பு சட்டத்தால் ஏழைகளுக்கு வீட்டினை சொந்தமாக்கினார் கலைஞர்! தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சக் கூலியை நிர்ணயிப்பதற்காக கணபதியாப்பிள்ளை ஆணையம் அமைத்து றைந்தபட்ச கூலியை உறுதி செய்தார் கலைஞர்! தஞ்சை மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி வரையறை செய்வதற்காக 1973ல் கார்த்திகேயன் ஆணையம் அமைத்து குறைந்தபட்ச கூலியை உறுதி செய்தார் முதல்வர் கலைஞர்! பண்ணையார்களிடம் இருந்த தஞ்சை பாட்டாளிகள் வசம் வந்தது; கீழ்வெண்மணி சாதிய கொலைக்கு காரணமான சாதிவெறியன் கோபாலாசாமி நாயுடுவை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்களில் 8 பேர் திராவிட கழகத்தினை சேர்ந்த பெரியாரிய தோழர்கள். இவ்வாறு ராஜீவ் காந்தி பதிவு செய்துள்ளார்.
கபிலன் @_kabilans என்பவரது பதில்: 25 Dec படுகொலை நடந்த போது பெரியாருக்கு வயது 90 கொலை நடந்த சமயம் 30ம் தேதி வரையில் மருத்துவமனையில் இருந்தார். 44 பேரை எரிக்க காரணமான கோபால் கிருஷ்ன நாயுடுவை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் அதில் 9 பேர் திராவிடர் கழகத் தோழர்கள். பல மணி நேரம் காத்து இருந்த கோபால் கிருஷ்ண நாயுடுவை சந்திக்காமல் அனுப்பி விட்டார் பெரியார் படுகொலை நடத்தியவர்கள் அனைவரும் நிலக்கிழார்கள் அதில் பலர் காங்கிரஸ்காரர்கள் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் அவர் கண்டனம் செய்ததற்கான ஆவணம் எதுவும் இல்லை. ஆனால் அவரை பற்றி வாய் திறக்க மாட்டார்கள் குறிப்பாக படுகொலை செய்த கோபலகிருஷ்ண நாயுடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பர். முதல்வர் அண்ணா உடல் நிலை சரி இல்லாது வாழ்வின் இறுதி நாட்களில் இருந்தார் எனினும் சட்ட ரீதியாக அரசு செய்ய வேண்டியவற்றை செய்தார்; கணபதியாபிள்ளை ஆணையம் அமைத்தார். 1975 ல் கோபால் சாமி நாயுடுவை விடுதலை செய்தது உயர்நீதி மன்றம், அந்த நேரத்துல் பெரியார் உயிரோடு இல்லை. ஆனால் படுகொலை நடந்த அந்த வாரமே விடுதலை நாள் இதழில் இப்படுகொலை குறித்து அறிக்கை கண்டனங்கள் கொடுக்கப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் கீவளூர் வந்திருந்த பெரியாரை சந்திக்க முயன்ற போது பெரியார் " என் கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்லச் சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரை கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போ. போ. போகச் சொல்லு" எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். 1952 முதல் தஞ்சை பகுதியில் திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூலி உயர்வு கேட்ட போது பெரியார் இலாபத்தில் பங்கு கேட்டார் இது எல்லாம் கூடுதல் தகவல்கள் . இவ்வாறு சீமானுக்கு பதிலடி தரப்பட்டுள்ளது.