பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்:தனுசு, மகரம், கும்பம், மீனம் எப்படி இருக்கும்
மங்களரகமான பிலவ வருடம் பிறக்கப் போகிறது. இந்த பிலவ வருடத்தில் வருட கிரகங்களான குரு, சனி, ராகு கேது ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள்
சென்னை: மங்களகரமான பிலவ வருடம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று புதன்கிழமை பிறக்கிறது. ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். பிலவ வருடத்தில் ராஜாவாக செவ்வாய் வருவதால் இரண்டு மரக்கால் மழை பொழியும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. இந்த பிலவ வருடத்தில் குரு பகவான் முதலில் கும்ப ராசியில் அதிசாரமாக பயணித்து பின்னர் மகர ராசிக்கு வந்து மீண்டும் கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார். சனி பகவான் மகர ராசியிலும் ராகு ரிஷப ராசியிலும் கேது விருச்சிக ராசியிலும் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
குரு பகவான் தற்போது அதிசாரமாக கும்ப ராசியில் பயணம் செய்கிறார் செப்டம்பர் 14ஆம் தேதியன்று வக்ர கதியில் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு திரும்புகிறார். நவம்பர் 11ஆம் தேதி குரு நேர்கதியில் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஏப்ரல் 13ஆம் தேதி 2022ஆம் ஆண்டு மீன ராசிக்கு பயணம் செய்கிறார்.
ராகு கேது பெயர்ச்சி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பயணம் செய்கிறார். சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் மகர ராசியில் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு திருமண யோகம் கைகூடி வருமா? நல்ல வேலை கிடைக்குமா? வருமானம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மேஷம்,ரிஷபம், மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு எப்படி?
தனுசு
குரு பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த பிலவ ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் பயணம் செய்கிறார். ஏழரை சனியில் பாதசனி நடைபெறுகிறது. ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிலும் கேது உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிலும் பயணம் செய்கிறார். குரு பகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மனதில் தைரியமும் உடம்பில் தெம்பும் பிறக்கும். பேச்சில் கவனம் தேவை. குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் உள்ள தனித்த சனிபகவான் சில சிக்கல்களை ஏற்படுத்துவார் எனவே கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் நவம்பர் 20ஆம் தேதி வரை குரு பகவான் மீண்டும் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு வருவது சிறப்பு. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். புதிய தொழில் தொடங்கலாம் வெற்றி கிடைக்கும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைக்கும். நவம்பர் 20ஆம் தேதிக்கு மேல் குரு மீண்டும் நேர்கதியில் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு செல்லும் காலத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்களிலும், உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
ஜாமீன் கையெழுத்துப்போட்டு பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். மாதம் ஒருமுறை குல தெய்வ கோவிலுக்கு போய் வழிபட்டு வருவது நன்மையைத் தரும். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கவும் நன்மைகள் நடைபெறும்.
மகரம்
ஆயுள்காரகன் சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, பிலவ தமிழ் புத்தாண்டில் உங்கள் ஜென்ம ராசியில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிலும் கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும் பயணம் செய்கிறார். வருட ஆரம்பத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார்.
அற்புதமான ஆண்டு, அரசு தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சியடையும். குருவின் சஞ்சாரம், பார்வையால் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். உங்கள் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார் உடலில் ஒருவித அசதி ஏற்படும். ஜென்ம சனியாகவே இருந்தாலும் உங்கள் ராசிநாதன் என்பதால் பாதிப்புகள் அதிக அளவில் இருக்காது.
செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். நவம்பர் 20ஆம் தேதி வரை வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். நவம்பர்20ஆம் தேதிக்கு மேல் குரு பகவான் உஙகள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் மீண்டும் பயணம் செய்வது ராஜயோக காலமாகும். சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட கடன் பிரச்சினைகள் தீரும்.
கும்பம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, ஆண்டு முழுவதும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ராகு 4ஆம் வீட்டிலும் கேது 10ஆம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். வருட ஆரம்பத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார்.
ஜென்ம குருவினால் ஒரு வித மனக்குழப்பம் இருக்கத்தான் செய்யும் பதற்றம் வேண்டாம் குரு எந்த தீமையும் செய்ய மாட்டார். சுப விரைய செலவுகள் அதிகம் வரும். வேலையிலும் இருக்கும் இடத்திலும் இடமாற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும்.
பெற்றவர்களின உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி வரைக்கும் குரு பகவான் மீண்டும் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களுக்கு வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கும் சில நேரங்களில் வரவை விட செலவு அதிகமாகவே காணப்படும். எந்த புதிய முயற்சிகளையும் ஒத்திப்போடவும் பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம்.
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நவம்பர் 20ஆம் தேதிக்கு மேல் குருபகவான் உங்கள் ராசிக்குள் வருவதால் தொழில் துறையில் இருந்த மந்த நிலை சீராகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவரவும் அதன் மூலம் சேமிப்பும் உயரும். இந்த ஆண்டு ஜென்ம நட்சத்திர நாளில் விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்கி வரலாம். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.
மீனம்
பொன்னவன் குரு பகவானை ராசி நாதனானக் கொண்ட மீன ராசிக்காரர்களே, இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். குரு பகவான் வருட ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.
செப்டம்பர் 14ஆம் தேதி வரைக்கும் குருவின் பயணம் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும் சுப விரைய செலவுகளும் அதிகம் வரும். தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதை தவிர்த்து விடவும்.
செப்டம்பர் 14ஆம் தேதிக்கு மேல் குருபகவான் லாப ஸ்தானத்திற்கு சென்று சனியுடன் மீண்டும் இணைந்த பிறகு மனதில் உற்சாகம் ஏற்படும். விரைய செலவுகள் படிப்படியாக குறையும். புதிய தொழில் தொடங்கலாம். தொழில் விருத்திக்காக செய்யும் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வீட்டில் குழந்தைகள் மூலம் சுப காரியங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது அக்கறை காட்டுங்கள்.
கல்வியில் சிறப்பு ஏற்படும். மாணவர்களுக்கு மனதில் தெளிவு பிறக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நவம்பர் 20ஆம் தேதிக்கு மேல் குரு பகவான் மீண்டும் விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். ஆன்மீக பயணம் செல்வதன் மூலம் மன நிம்மதி அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கவும். குல தெய்வ வழிபாடு செய்வது குடும்பத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தும்.