மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி.. பல்லடம் தான் பாயிண்ட்டாம்.. அண்ணாமலை சொன்ன லேட்டஸ்ட் தகவல்!
சென்னை: 'என் மண் என் மக்கள்’ நடைபயண நிறைவு விழா தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வது உறுதி என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கினார். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த யாத்திரை 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், அண்ணாமலை யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பாக, என் மண் என் மக்கள் யாத்திரை 234 தொகுதிகளிலும் முடித்திருப்போம். சென்னையில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி இல்லை. எனவே, இங்குள்ள 20 தொகுதிகளில் மட்டும் மக்களை உள் அரங்கு கூட்டங்களில் சந்தித்து வருகிறோம். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு பல்லடத்தில் நடைபெறுவது உறுதி.
என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பல்லடத்துக்குத்தான் வருகிறார். அதில் எந்த மாற்றமும், சந்தேகமும் இல்லை. ஆனால், எந்த தேதியில் வருகிறார் என்பதை இரண்டு, மூன்று நாட்களில் அறிவிக்கிறோம். காரணம், பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்கான வாய்ப்பு இருக்கும்போது, அந்த தேதியையும் இறுதி செய்த பின்னர்தான், தேதியை அவர்கள் அறிவிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
ரொம்ப ஜாம் ஆகுதே.. “தேர்தல் பத்திர நிதி அதிகம் பெற்றது தமிழ் மாநில காங்கிரஸ்”: கன்பியூஸ் ஆன அண்ணாமலை
அப்போது நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "தேர்தல் நேரத்தில் சிலர் அந்தக் கட்சியில் இணைவார்கள். சிலர் இந்தக் கட்சியில் இணைவார்கள். இது ஒன்றும் புதிதல்ல. கவுதமி ராஜபாளையத்தில் போட்டியிட கட்சி வாய்ப்பு தருவதாக கூறியிருந்ததாகவும், ஆனால், வாய்ப்பு தரவில்லை என்றும் சொல்லியிருந்தார். இன்று அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். சில விஷயங்களை வெளிப்படையாக வெளியே பேசுவது நல்லதல்ல.
பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது இன்னும் நிறைய பேர் பாஜகவில் இணையப் போகின்றனர். பாஜகவில் இருந்து மாற்றுக் கட்சிக்கு செல்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். அதேபோல், பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தால், அவர்களுடைய பழைய கட்சியைக் குறித்து யாரும் பேச வேண்டும் என்று கட்சியினரிடம் நான் கூறியிருக்கிறேன். எனவே, மக்கள் வருவதும் போவதும் சகஜம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications