குடியரசு தலைவர் தேர்தல்.. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, காங். தலைவர்கள் வாக்களித்தனர்
டெல்லி: குடியரசுத்தலைவர் தேர்தலில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்.
நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
நாட்டின் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய இன்றைய தினம் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மொத்தம் 4800 பேர் வாக்களிக்க உள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல்.. மருத்துவமனையில் இருந்து நேரடியாக சென்று வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகத் திரெளபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற அலுவலகம், மாநிலச் சட்டசபை அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி
இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளன. அதன்படி டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கிய உடன் முதல் நபராகப் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். பச்சை நிற வாக்குச்சீட்டில் அவர் வாக்களித்தார்.
காங். மூத்த தலைவர்கள்
அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர். அதேபோல மக்களவை- மாநிலங்களவை எம்பிக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் எம்பிக்கள் சோனியா காந்தி, சசி தரூர், மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் வாக்களித்தனர். மாலை 5 மணி வரை எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகத் திரெளபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் முர்முவிற்கு என்டிஏ கூட்டணிக் கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன.
வெல்லும் வாய்ப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலில், எம்.பிக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,200, எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,231. மொத்தமாக 10,86,431 ஆகும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,25,893 ஆகும்..அதாவது 48.67 சதவீத வாக்குகளைக் கைவசம் உள்ள நிலையில், வேறு சில கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதால், 50% வாக்குகளை எட்டி திரெளபதி முர்மு வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது