நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு வழிகோலிய நடிகர் விவேக் - ராமதாஸ், அன்புமணி இரங்கல்
நகைச்சுவைகளின் மூலம் பிறரின் மன இறுக்கங்களைப் போக்கி, நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு வழிகோலிய நடிகர் விவேக், இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகம் என்று டாக்டர் ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: தமது நகைச்சுவைகளின் மூலம் பிறரின் மன இறுக்கங்களைப் போக்கி, நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு வழிகோலிய நடிகர் விவேக், இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில் பதிவிட்டுள்ளார்.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலையில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சித்தலைவர்களும் திரை உலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமானோர் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் விவேக் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர். அவரது நகைச்சுவைகள் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்கச் செய்ய வைப்பவையாகவும் இருக்கும்.
மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர். அதனால் சின்னக் கலைவாணர் என்று போற்றப்பட்டவர். தமது நகைச்சுவைகளின் மூலம் பிறரின் மன இறுக்கங்களைப் போக்கி, நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு வழிகோலிய நடிகர் விவேக், இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகம். அந்த செய்தியை ஏற்க முடியவில்லை.
திரைத்துறைக்கு வெளியிலும் சமூகப் பொறுப்பு மிக்கவராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். மரங்களை நடுவதை தமது சமூகக் கடமையாகக் கொண்டிருந்த அவர், பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தவர். வெளியில் தெரியாமல் பல குழந்தைகளின் கல்விக்கு உதவியவர். மாரடைப்பால் பாதிக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் உடல் நலம் தேறி விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள், ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த நடிகர்களில் ஒருவரான விவேக் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தமிழ்த் திரையுலகில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் விவேக்கும் ஒருவர். திரைப்படங்களில் நடித்து பணமும், புகழும் ஈட்டுவதை மட்டுமே லட்சியமாகக் கொள்ளாதவர். அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் சமூகத்திற்கான ஒரு கருத்து இருக்கும். குறிப்பாக சாமி திரைப்படத்தில் சமூகத்தின் அடித்தட்டில் உள்ள குழந்தைகளும் படிக்க வேண்டும்; அதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்ற மிகப்பெரிய செய்தியை நகைச்சுவை உணர்வும், விமர்சனமும் கலந்து பதிவு செய்திருப்பார். திரைப்படங்களை சமூக விழிப்புணர்வூட்டுவதற்கான ஊடகமாக கருதியவர்; பயன்படுத்தியவர். அதனால் தான் சின்னக் கலைவாணர் என்று திரைத்துறைக்கு வெளியில் உள்ளவர்களாலும் அழைக்கப் பட்டவர்.
சுற்றுச்சூழலைக் காப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். ஏராளமான மரங்களை நட்டவர். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த அரசும், சமூகங்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆண்டு காணொலி பதிவு ஒன்றை நான் வெளியிட்ட போது, அதை மனமுவந்து பாராட்டியவர். விவேக் போன்றவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்ந்து சமூகத்திற்கு பணியாற்றியிருக்க வேண்டும். இளம் வயதில் அவரது மறைவை ஏற்க முடியவில்லை.
நடிகர் விவேக் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்என்று தெரிவித்துள்ளார்.