"மனித வேட்டை.. ஒருபுறம் ஆன்லைன் சூதாட்டம்.. மறுபுறம் கள்ள லாட்டரி!" விளாசும் பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: கள்ள லாட்டரி விவகாரத்தில் நூல் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை அடுத்துள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் நூல் வியாபாரம் செய்து வந்தார்.
இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சரிடம் கோரிக்கை.. மறு நிமிடமே தற்கொலை! திமுக கவுன்சிலர் கணவர் மீது புகார் - லாட்டரி காரணமா?
தற்கொலை
தற்கொலைக்கு முன்னர் ராதாகிருஷ்ணன் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதில் தனது தற்கொலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டி உள்ளார். அந்த நபர் நடத்தி வந்த லாட்டரி ஏஜென்சியில் கிட்டத்தட்ட 62 லட்ச ரூபாயை இழந்துவிட்டதாகவும் தனது தற்கொலைக்குப் பிறகு 30 லட்சம் ரூபாயையாவது குடும்பத்திற்குப் பெற்ற தரவேண்டும் என்று உருக்கமாகக் கோரிக்கை வைத்துள்ளார்,
வீடியோ
மேலும், லாட்டரி விற்பனையால் தன்னைப் போல பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே லாட்டரி சீட்டை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமிக்குக் கோரிக்கை வைக்கும் வகையில் அந்த வீடியோவை பதிவு செய்துவிட்டு ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அவர் எப்போது எப்படிப் பணத்தை இழந்தார் என்பது குறித்து ஆதாரங்களைச் சேகரித்து வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமதாஸ்
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்ற நூல் வணிகர் கள்ள லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. இது குறித்து காணொலி வாக்குமூலமும் வெளியிட்டுள்ளார்! தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டன.
மனித வேட்டை
அதன்பிறகும் லாட்டரி விற்பனை தொடர்கிறது; ஒருவரே ரூ.62 லட்சத்தை இழந்திருக்கிறார் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் கள்ள லாட்டரி விற்பனை எந்த அளவுக்குப் புரையோடியிருக்கிறது என்பதை உணர முடியும்! ஏற்கனவே ஒருபுறம் ஆன்லைன் சூதாட்டம் உயிர்களைப் பலி வாங்கும் நிலையில், கள்ள லாட்டரியும் மனித வேட்டையைத் தொடங்கினால் மக்கள் தாங்க மாட்டார்கள். அதனால், தமிழகத்தில் கள்ள லாட்டரியை அடியோடு ஒழிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.