இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி... ஆன்லைன் சூதாட்டம்.. தமிழக அரசு நடவடிக்கை குறித்து ராமதாஸ் பெருமிதம்
சென்னை: ஆன்லைன் ரம்மி தொடர்பாகத் தமிழக அரசின் நடவடிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
முதலில் வெறும் பொழுது போக்கிற்காக விளையாடத் தொடங்கும் பலரும், ஒரு கட்டத்தில் பணத்தை வைத்து விளையாடி இதற்கே அடிமையாகி விடுகிறார்கள்.

தற்கொலை
இப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை மணலியைச் சேர்ந்த பவானி என்பவர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானர். 29 வயதான பவானிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த விளையாட்டில் இதுவரை அவர் 20 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணத்தையும் இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி பாவனி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாமக
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் அரசு மீண்டும் ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பாமக சார்பில் ஆன்லைன் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதை வலியுறுத்தி பாமக சார்பில் இன்று போராட்டமும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

குழு
இந்தச் சூழலில் தான் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டத்தை உருவாக்கச் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு அடுத்த இரு வாரங்களில் தங்கள் பரிந்துரையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

ராமதாஸ்
இது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதும், அக்குழுவின் அறிக்கையை இரு வாரங்களில் பெற்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும்! தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பா.ம.க. கடந்த 6 ஆண்டுகளாக தீவிரமாகப் போராடி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட பா.ம.க தான் காரணம். இப்போதும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கும் பா.ம.க. தான் காரணம்!

தடை தேவை
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாமக அறிவித்த போராட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக தமிழக அரசின் அறிவிப்பு வந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கும், ஆக்கப்பூர்வ அரசியலுக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இதில் பாமக பெருமிதமடைகிறது! வல்லுநர் குழுவின் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இரு வாரங்களில் அறிக்கை பெறப்பட வேண்டும். அதன் பின்னர் எந்த தாமதத்திற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!" என்று ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications