5 லட்சியம் 3 நிச்சயம்; எந்தெந்த இடங்களுக்கு பாமக குறி தெரியுமா? திமுகவுடன் ஒன் டூ ஒன் மோதல்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி 3 மாநகராட்சிகளை குறிவைத்து அங்கு முழுவீச்சில் பணிகளை தொடங்கிவிட்டது.
காஞ்சிபுரம், சேலம், ஒசூர், கும்பகோணம், கடலூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் வெல்ல வேண்டும் என எண்ணினாலும் அதில் 3 மாநகராட்சிகளை மட்டும் இலக்காக கொண்டு தீவிரமாக களமாட தொடங்கிவிட்டனர் பாமகவினர்.
அதன்படி காஞ்சிபுரம், ஒசூர், கடலூர், ஆகிய 3 மாநகராட்சிகளை கைப்பற்றுவதற்கான வியூகங்களை பாமக தலைமை வகுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பழங்குடியினருக்காக பல வருடங்கள் முன்பே போராடிய பாமக.. 'திண்டுக்கல் சம்பவத்தை' நினைவூட்டும் ராமதாஸ்
மாநகராட்சி தேர்தல்
தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் கட்சிகள் இப்போதே அதற்காக ஆயத்தமாகிவிட்டன. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இந்த முறை குறைந்தது 3 மேயர் இடங்களையாவது பிடிக்க வேண்டும் என விரும்பும் அக்கட்சியின் தலைமை அதற்கான தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இல்லாவிட்டாலும் பாஜகவுடனான கூட்டணி விவகாரத்தில் குழப்பமான நிலையிலேயே பாமக இருந்து வருகிறது.
பாஜக திட்டம்
பாமக தங்கள் கூட்டணியில் தொடர வேண்டும் என விரும்பும் பாஜக தலைமை, அதிமுகவுக்காக வேண்டாம் தங்களுக்காக கூட்டணியில் நீடிக்குமாறு தைலாபுரம் தோட்டத்துக்கு தூது அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காதபட்சத்தில், பாமக தனித்து களம் காணவும் ஆயத்தமாகவே இருந்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட பாமக தனித்து களம் கண்டது கவனிக்கத்தக்கது. இதேபோல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் எந்த முடிவெடுத்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை.
வெற்றி தோல்வி
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் இருந்தாலும் கூட வடதமிழகத்திற்குள் வரும் 5 மாநகராட்சிகளை மட்டும் லட்சியமாகவும் அதில் 3 மாநகராட்சிகளை நிச்சயமாகவும் கைப்பற்ற வேண்டும் என விரும்பும் பாமக தலைமை, அதற்கான முன்னோட்ட பணிகளை துவக்கி வைத்துவிட்டது. பாமக குறிவைத்துள்ள மேற்கண்ட இடங்கள் அனைத்திலும் வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.
வாக்கு வங்கி
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு பிறகு வடதமிழகத்தில் பாமகவுக்கான வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்திருப்பதாக தெரிகிறது. சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்காக முதல் குரல் கொடுப்பதும் களமிறங்கி போராடுவதும் பாமக தான் என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் மூலம் வன்னியர் சமுதாய மக்களிடையே அக்கட்சியினர் கொண்டு சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாமக குறிவைத்துள்ள 3 இடங்களிலும் திமுக நேரடியாக போட்டியிடும் எனத் தெரிகிறது. ஒரு வேளை திமுகவும் பாமகவும் நேரெதிராக போட்டியிட்டால் அரசியல் களத்தில் அனல் பறக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.