வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து.. வன்னிய மக்களுக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் பேரிடி.. ஜிகே மணி பேச்சு
சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்த உத்தரவு ஒட்டுமொத்த வன்னிய மக்களுக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் பேரிடி எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது இந்த கோரிக்கையை ஏற்று, சட்டமும் இயற்றப்பட்டது. மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.

10.5 % இட ஒதுக்கீடு
இந்நிலையில், இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தத் தடை விதிக்க கோரி 25க்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் இந்த சட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதர எம்பிசி பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகும் மனுதாரர்கள் குறிப்பிட்டனர். மேலும், தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

ரத்து
அதேநேரம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து உத்தரவிட்டனர். முறையாகச் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் எப்படி இட ஒதுக்கீடு வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

முதல்வருடன் சந்திப்பு
வன்னியர் சமூகத்திற்கான இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த உத்தரவு ஒட்டுமொத்த வன்னிய மக்களுக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் பேரிடி என பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, பாமக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

முதல்வர் உறுதி
இட ஒதுக்கீடு மூலமாகக் கல்வி, வேலைவாய்ப்புகளில் பயனடைந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். மேலும், ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பாமக உறுதியாக இருக்கிறது" என்று தெரிவித்தார். மேலும் இந்தத் தீர்பைத் தொடர்ந்து சில இடங்களில் பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவித்து வன்முறை ஏற்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவ்வாறு நடைபெறக்கூடாது என்பது தான் பாமகவின் நிலை என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications