மண்டைக்கேறிய கஞ்சா போதை! சிக்கன் மசாலாவால் வந்த சிக்கல்! கல்லாவுடன் கல்தா கொடுத்தவர்கள் கைது..!
சென்னை : சென்னை சேலையூர் பகுதியில் கஞ்சா போதையில் சிக்கன் 65 மசாலா மற்றும் சிக்கன் ரைசில் சிக்கன் குறைவாக இருந்ததாக கூறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம் செல்லும் பிரதான சாலையில் ராஜா என்பவர் ஃபாஸ்ட் ஃபுட் நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் காரில் வந்த 5 பேர் உணவகத்தில் பரோட்டா, சிக்கன் ரைஸ், சில்லி சிக்கன் போன்ற உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர்.

கஞ்சா போதை
இந்நிலையில் உணவுகளை பார்சல் ஆர்டர் செய்ய வந்தவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஊழியர்கள் ஆர்டர் செய்த உணவுகளை பார்சல் செய்து கொண்டிருக்கும் போது, ஒருவர்
சமையல் மாஸ்டரிடம் சிக்கன் 65ல் மசலாவே இல்லை என்று கிண்டல் அடித்துள்ளார்.

சிக்கன் ரைஸ்
மேலும் சிக்கன்ரைஸில் சிக்கனே இல்லை எனவும் கூறி ஊழியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடன் இருந்த நபர்கள் திடீரென பாஸ்ட் புட் மாஸ்டரை அடித்தனர். இதனால் கடையில் வேலைப்பார்க்கும் நபர்களுக்கும், உணவு வாங்க வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

உரிமையாளர் மீது தாக்குதல்
ஒரு கட்டத்தில் போதை வாலிபர்கள் காரில் இருந்து பட்டாகத்தியை எடுத்துகாட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றனர். மேலும் தப்பி செல்லும் போது ஆர்டர் செய்த உணவினையும் பணம் கொடுக்காமல் எடுத்து சென்று விட்டனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சியுடன் கடையின் உரிமையாளர் ராஜா சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

4 பேர் கைது
புகாரின் பேரில் சிசிடிவி காட்சி மற்றும் காரின் நம்பரை வைத்து மணிகண்டன், ரோகித், அரவிந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் போதை பொருட்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் ஆபரேஷன் திட்டம் காவல்துறை மூலம் செயல்பட்டு வருகிறது ஆனாலும் சில பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும் காவல்துறையினர் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications