இது சும்மா டிரெய்லர்தான்.. "இன்று புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு".. இதுக்கெல்லாம் ஒரே வழி "அது"தான்..!
புதுச்சேரி அரசியல் தமிழகத்துக்கு ஒரு பாடமாக விளங்குகிறது
சென்னை: நடப்பதெல்லாம் நல்லதுக்குதான்.. இப்போ புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறதே ஒரு அரசியல், அது எண்ணற்ற பாடங்களை நமக்கு கற்று தந்து கொண்டிருக்கிறது.. இன்று புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு..!
புதுச்சேரியில் ஒவ்வொரு காங்கிரஸ் எம்எல்ஏவாக ராஜினாமா செய்தது போக, திமுக எம்எல்ஏவும் ராஜினாமா செய்து விட்டார்.. இதனால் காங்கிரஸ் அரசின் கவிழ்ப்பு அப்போதே உறுதியாகிவிட்டது.
காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டுக்கு சென்று ராஜினாமா லெட்டரை தந்தார்.. அவர் கிளம்பி சென்ற அடுத்த 10 நிமிஷத்துலயே திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சென்று அவரது ராஜினாமா லெட்டரை தந்தார்.. இவருக்கு பின்னால், சமீபத்தில் பாஜகவுக்கு சென்ற நமசிவாயம் இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது..
புதுச்சேரி: திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் ராஜினாமா- ஒரேநாளில் 2 பேர் பதவி விலகலால் பரபரப்பு!
ராஜினாமா
இப்போதைக்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக குறைந்துவிட்டது.. அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்தது? சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் நியமன உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு முதல்வர் அழுத்தம் கொடுக்கலாம் என்ற யூகமும் உள்ளது.. ஆனாலும், புதுச்சேரி காங்கிரஸ் அரசு கிட்டத்தட்ட வீட்டுக்கு போகும் நிலைமைக்கே வந்துவிட்டது. பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமென்ற கட்டாயமும் ஏற்பட்டுள்ளது..
கவர்னர்
இதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? தவறு எங்கே நடந்துள்ளது? புதுச்சேரி அரசாங்க நிர்வாகத்தை கவர்னரைக்கொண்டு எவ்வளவுக்கு எவ்வளவு குடைச்சல் தர முடியுமோ அவ்வளவும் தந்து, சீரழித்து ஆட்சியாளர்களையும், மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது முதல் தவறு என்பதே மக்களின் பரவலான கருத்தாக உள்ளது..
பாஜக
செய்வதையும் செய்துவிட்டு, கடைசியில் கவர்னரை நீக்கியது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட கதைதான். இப்படியே எல்லா மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர துடிக்கும் பாஜகவின் செயல்பாடுகளை மக்கள் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள்.
ராஜினாமா
அடுத்ததாக, மக்களுக்கு தான் இது ஒரு பெரிய பாடம்.. இப்படி டக்குடக்கென ராஜினாமா செய்தவர்களுக்கு எத்தனையோ அழுத்தங்கள் இருந்திருக்கலாம்.. ஆசைகள் இருந்திருக்கலாம்.. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்படி எதுவுமே இல்லை.. ஆனால், மறுபடியும் இதுபோன்றவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க முடியும்.. புதுச்சேரியை யார் வேண்டுமானாலும் கபளீகரம் செய்துவிட முடியாது என்ற பாடத்தை வரும் தேர்தலில் புகட்ட வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது.
போராட்டம்
இந்த இடத்தில் இன்னொன்றையும் யோசிக்க வேண்டி உள்ளது.. கிரண்பேடியை எதிர்த்து நாராயணசாமி என்னென்னவோ போராட்டங்களை செய்தார்.. நடுத்தெருவில் பெட்ஷீட் விரித்துகொண்டு படுத்தும், தன் எதிர்ப்புகளை பதிவு செய்தார்.. ஆனாலும் அவருடன் இருந்தவர்களே இன்று விலகிப் போய்க் கொண்டுள்ளனர். கிரண் பேடி போய் விட்டார் என்று சந்தோஷப்பட்டார் நாராயணசாமி.. ஆனால் இன்று அவரது ஆட்சிக்கே அபாயம் ஏற்பட்டு விட்டது.
கட்சி
எனினும், இது தமிழ்நாட்டுக்கும் உணர்த்தும் பாடம்.. இங்கேயும் தேர்தல் நடக்க போகிறது.. இன்னும் ஒரு கட்சியிலும் கூட்டணி முடிவாகவில்லை.. ஏன்? அந்த கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது? யார் யாருடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை வைத்து கொண்டிருக்கிறார்கள்? யார் யார் நாளை சொந்த கட்சிக்கு எதிராக துரோகிகளாக கடைசி நேரத்தில் மாற போகிறார்கள்? என்பதெல்லாம் எதுவுமே தெரியவில்லை..
மாண்புகள்
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற பொத்தாம் பொதுவான விதி ஒன்று இருக்கும்வரை, ஜனநாயக மாண்புகள் இங்கு தழைத்தோங்க வாய்ப்பே இல்லை.. மக்கள்தான் உணர வேண்டி உள்ளது.. நேர்மையான, சுத்தமான எம்பிக்கள், எம்எல்ஏக்களை தேர்வு செய்யாவிட்டால் ஆகப்பெரும் பலம்வாய்ந்த கட்சிகள் உடைவதை கூட ஆண்டவனே நினைத்தாலும் கூட தடுக்க முடியாது... இப்படி ஒரு சிக்னல்தான் புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளதாக எடுத்து கொள்ள வேண்டி உள்ளது.