தை பொங்கல் கொண்டாட சொந்த ஊர் போறீங்களா?ஸ்பெஷல் பஸ் டிக்கெட் ரிசர்வேசன் ஆரம்பம்
சென்னை: தை பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு அரசு விரைவு பேருந்துகளில் தொடங்கியது. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை,திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் இடம்பெயர்ந்த மக்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர் செல்வார்கள். ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தை பொங்கல் பண்டிகைகளை சொந்த ஊர் சென்று கொண்டாடுவார்கள்.

கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று கொண்டாடினர். இதற்கான 16ஆயிரம் சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். 90% க்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து கழகம் சார்பில் 300 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளுக்கு விரைவு, சொகுசு மற்றும் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளுக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துறை அதிகாரிகள், பொங்கலுக்காக ஜனவரி11ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியது.
அடுத்தடுத்த நாட்களுக்கும் முன் பதிவு செய்யலாம். தற்போது குறைந்த அளவே முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் நெருங்கும் போது இது அதிகரிக்கும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications