ரேஷன் கடைகளில் தொடங்கியது பொங்கல் பரிசு தொகுப்பு.. மக்கள் மகிழ்ச்சி
சென்னை: ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 2,500 பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இன்று தொடங்கியது. டோக்கன் உள்ளவர்கள் வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள். அரசு வழங்கும் பணம் போதுமானதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 2500 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதற்காக ரூ 5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 2.10 கோடி ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் இங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் 18,923 பேருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு (5 அடி நீளம்) மற்றும் துணிப்பை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு பண்டக சாலை மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் அதனை எடைக்கு ஏற்ப 'பேக்கிங்' செய்து துணிப்பையில் போட்டு தயாராக வைத்துள்ளனர். எனவே ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை மட்டும் எடை போட்டு வழங்கப்பட உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும், கூட்டநெரிசலால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாகவும் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் என 2 ஷிப்டுகளாக பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.
அரிசி அட்டைதாரர்கள் எந்த தேதியில் பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கிய டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் காலை வேளையில் 100 பேருக்கும், மதிய வேளையில் 100 பேருக்கும் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. ரூ.2,500 வெளிப்படையாக கையில்தான் வழங்க வேண்டும்.
கவரில் போட்டு வழங்க கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில், அவர்களுக்கு முதலில் பொருட்களை வழங்க வேண்டும். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசைகள் ஏற்படுத்திட வேண்டும்.
புதுவையில் 9 மாதங்களுக்கு பிறகு.. 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
பொருட்கள் வாங்க வருபவர்கள் முக கவசம், சமூக இடைவெளி ஆகிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பணப் புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் ஒவ்வொரு கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூட்டுறவுத் துறை சார்பில் அந்தந்த மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்புடன் ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் பொங்கல் பரிசு தொகையை பெற முடியாவிட்டால் 19-ஆம் தேதி அன்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.