பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை! பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடம்! -ராமதாஸ்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடம் எனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையும் ராமதாஸ் வரவேற்கிறார் என்பது தெரிய வருகிறது. இது குறித்து ராமதாஸ் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு;
''வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம்.
அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.'' இவ்வாறு ராமதாஸ் தனது பதிவில் கூறியுள்ளார்.
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இழந்துவிட்டார் பொன்முடி. இதனால் அவரது திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் பாமக தனித்து களம் காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. பாமகவை பொறுத்தவரை ஏற்கனவே ஒருமுறை திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications